"வெறுப்புல கருப்பு படம் பார்க்கல!".. பிறகு நடந்த அதிசயம்.. மனம் திறந்த நடிகை ஆனந்தி
சென்னை: சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படம் வசூல் ரீதியாகவும், ரசிகர்களின் வரவேற்பிலும் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த படத்தில் நடித்த சின்னத்திரை நடிகை ஆனந்தியின் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக ஒரு நடிகர் அல்லது நடிகை பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்தால் அதை பெருமையாக கூறுவார்கள். ஆனால் கருப்பு படத்தை பொறுத்தவரை, படத்தில் நடித்தும் அந்த படத்தை பார்க்கவே மனமில்லாமல் போனதாக ஆனந்தி கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கருப்பில் நடித்த ஆனந்தி
சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகை ஆனந்தி, கருப்பு திரைப்படத்தில் முக்கியமான ஒரு காட்சியில் நடித்திருந்தார். அதிலும் சாதாரண கதாபாத்திரம் அல்ல. நடிகர் காளி வெங்கட்டுக்கு ஜோடியாகவே அவர் நடித்திருந்ததாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்த பிறகு தன்னுடைய காட்சிகள் படத்தில் இடம்பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்த ஆனந்திக்கு, சில நாட்களுக்கு முன்பே அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
ஒரு நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை சந்தித்தபோது, கருப்பு படத்தில் பல காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். அப்போது, "நீங்க நடித்த காட்சிகள் கூட படத்தில் வரும்னு சொல்ல முடியாது" என்று தயாரிப்பாளர் வெளிப்படையாக கூறியதாக ஆனந்தி தெரிவித்துள்ளார். இதனால் படம் வெளியாகும் முன்பே தனது காட்சிகள் நீக்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
சினிமாவுல இது சகஜம்
இதுபற்றி பேசிய ஆனந்தி, "சினிமாவில் இது சாதாரணமான விஷயம் தான். குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களில் பல காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்படுவது நடக்கக்கூடிய விஷயம். ஆனால் சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் நேரடியாக சொல்லிவிடுவது பெரிய விஷயம்" என்று கூறியுள்ளார்.
மேலும், "சில நேரங்களில் நடிகர்கள் தாங்கள் நடித்த காட்சிகள் இருக்கிறதா இல்லையா என்பதை முதல் நாள் தியேட்டருக்கு போய்தான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை கூட இருக்கும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
படம் பார்க்கல
ஆனந்தியின் பேட்டியில் அதிகம் பேசப்பட்ட விஷயம் இதுதான். தனது காட்சிகள் படத்தில் இருக்காது என்று நினைத்ததால், படம் பார்க்கவே செல்லவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
"நான் நடித்த காட்சிகள் இருக்காது என்ற வெறுப்பில் கருப்பு படத்தில் நடித்ததையே மறந்துவிட்டு லீவுக்கு சொந்த ஊருக்கு போய்விட்டேன்" என்று அவர் கூறியுள்ளார். இந்த ஒரு வரியே தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இனிய அதிர்ச்சி
ஆனால் படம் வெளியான பிறகு எதிர்பாராத திருப்பம் ஒன்று நடந்துள்ளது. கருப்பு படம் பார்த்த சில ரசிகர்கள் ஆனந்திக்கு நேரடியாக போன் செய்து, அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறியுள்ளனர். இதனால் ஆனந்தி இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.
"நான் நடித்த காட்சிகள் இருக்காது என்று நினைத்தேன். ஆனால் நாலு பேர் பார்த்து என்னை அடையாளம் கண்டுபிடிக்கிற அளவுக்கு நான் படத்தில் பதிவாகி இருக்கிறேன் என்று தெரிந்தபோது சந்தோஷமாக இருந்தது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
சின்ன கதாபாத்திரம்
கருப்பு போன்ற பெரிய படங்களில் சில நிமிடங்கள் தோன்றுவதற்கே பல நடிகர்கள் காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் தனது காட்சிகள் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டதாக நினைத்த ஆனந்திக்கு, ரசிகர்களின் அழைப்புகள் பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கின்றன. படத்தில் அதிக நேரம் இல்லாவிட்டாலும், ரசிகர்கள் தன்னை கவனித்தது தான் உண்மையான சந்தோஷம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஆனந்தியின் இந்த நேர்மையான பேட்டிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பொதுவாக பலர் வாய்ப்பு கிடைத்தது பற்றியே பேசுவார்கள். ஆனால் நடந்ததை அப்படியே வெளிப்படையாக சொன்ன ஆனந்தியின் எளிமை ரசிகர்களை கவர்ந்துள்ளது. கருப்பு படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றியிருந்தாலும், தற்போது அவரது இந்த பேட்டிதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications