ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு.. கர்நாடக காங்கிரஸ் பிரமுகரின் மகன் கைது.. பாஜக பகீர் குற்றச்சாட்டு
பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரின் மகனான தஜூதின் ஷேக் ரீஷன் என்ற கல்லூரி மாணவர் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் கர்நாடகாவில் அரசியல் ரீதியாகவும் எதிரொலித்துள்ளது. பயங்கரவாதிகளை காங்கிரஸ் பாதுகாப்பதாக கர்நாடக பாஜக சாடியுள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட குக்கர் வெடிகுண்டு வெடித்தது.
இதில் குக்கர் வெடிகுண்டை எடுத்துச்சென்ற ஷாரிக் என்பவரும் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் என்பவரும் படுகாயம் அடைந்தனர்.

குக்கர் வெடிகுண்டு
இது தொடர்பாக விசாரித்த போலீஸ், ஷாரிக்கிற்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர். மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் வெடிகுண்டை வெடிக்க வைத்து நாசவேலையில் ஈடுபடும் திட்டத்துடன் ஷாரிக் இருந்ததாகவும் போலீசார் பகீர் தகவலை வெளியிட்டனர். தமிழகத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற சில வாரங்களில் இந்த சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பல்வேறு இடங்களில் சோதனை
கர்நாடக குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது ஆகியுள்ள ஷாரிக்கின் கூட்டாளிகளான மாஸ் முனீர், சையது யாசின், ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். ஷிவ்மோகா ஐ.எஸ்.ஐ.எஸ் சதி வழக்க்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கர்நாடாகாவில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மகன்
இந்த நிலையில், ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக இரண்டு பேரை நேற்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். இதில் ரேஷன் தஜூதின் ஷேக் ரீஷன் என்பவர் கர்நாடக காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மகன் ஆவார். தஜூதின் ஷேக் ரீஷனின் தந்தை காங்கிரஸ் கட்சியின் உடுப்பி பகுதியில் உள்ள பிரஹம்வர் பிளாக்கில் பொதுச்செயலாளராக உள்ளார். ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மகன் பிடிபட்டுள்ளது கர்நாடகாவில் அரசியல் ரீதியிலான விமர்சனங்களுக்கும் வழி வகுத்துள்ளது.

டிகே சிவக்குமார் மீது பாஜக விமர்சனம்
இது தொடர்பாக பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. கடலோரப்பகுதிகளில் இதுபோன்ற சதித்திட்டங்கள் நீண்டகாலமாக நடைபெற்று வருவதாகவும் ஹிஜாப் போராட்டத்தின் போது கூட இது வலியுறுத்தப்பட்டது என்றும் பாஜக சாடியுள்ளது. மேலும், பயங்கரவாதிகளை பாதுகாப்பதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் மீது பாஜக விமர்சனங்களை முன்வைத்துள்ளது. எனினும், இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் விசாரணை அமைப்புகளை முறைகேடாக பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியை ஆளும் பாஜக குறிவைப்பதாக சாடியுள்ளது.

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக..
இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள ரீஷன், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாட்டாளர்களால் ஈர்க்கப்பட்டு அந்த அமைப்பினரிடம் இருந்து கிரிப்டோ கரன்சிகளையும் வாலட் பெற்று வந்ததாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பெயரில் வாகனங்களை சேதப்படுத்துதல், மதுக்கடைகள், குடோன்களை சேதப்படுத்துதல், தீ வைப்பது போன்ற சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications