பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டால் என்ஜாய் - திமிர் பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் எம்எல்ஏ
பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டால் நன்றாக சாய்ந்து படுத்து அனுபவியுங்கள் என்று கர்நாடாக சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
பெங்களூரு: பலாத்காரம் தவிர்க்க முடியாததாக இருக்கும்போது, நன்றாக சாய்ந்து படுத்து அனுபவியுங்கள் என்று கர்நாடகா சட்டசபையில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ் குமாரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் மன்னிப்பு கோர வேண்டும் என பெண் எம்எல்ஏக்கள் வலியுறுத்தவே, இனிமேல் எனது வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுப்பேன் என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.
சட்டசபையில் சர்ச்சையாக பேசி ட்ரெண்ட் ஆகுபவர்கள் பலர் உள்ளனர். அதில் காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் சபாநாயகருமான ரமேஷ் குமார் சர்ச்சையாக பேசியே ஊடகங்களில் தலைப்புச் செய்தியில் இடம் பெறுவார்.
கடந்த 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ் குமார் சபாநாயகராக இருந்தபோது, என் நிலைமை பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலை போன்றது என்று கூறி அதிர வைத்தார். இப்போது மீண்டும் அதே போல ஒரு சர்ச்சையான பேச்சினால் பலரது கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை உயர இதுதான் காரணமா.. கர்நாடகா மாநில அமைச்சரின் வினோத விளக்கம்
சர்ச்சை பேச்சு
ரமேஷ்குமார் எம்எல்ஏ சர்ச்சைக்கு உரிய வகையில் பழமொழி ஒன்றை கூறி சட்டசபையில் பலரது எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார். கர்நாடக சட்டசபைக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சமீபத்திய மழை வெள்ள பாதிப்புகள், குறித்து பல்வேறு எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதிகளில் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் குறித்து பேச சபாநாயகரிடம் நேரம் கேட்டு ஒரே நேரத்தில் வலியுறுத்தினர்.
திக்குமுக்காடிய சபாநாயகர்
சபை நேரம் முடிவடையும் மாலை 6 மணிக்குள் சபையை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த சபாநாயகர் உறுப்பினர்களின் கோரிக்கைகளால் திக்குமுக்காடினார். அப்போது, சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி சிரித்தவாறே, "நான் எப்படிப் பட்ட சூழலில் இருக்கிறேன் என்றால் இதையெல்லாம் ரசித்துவிட்டு ஆமாம்.. ஆமாம்... என்று சொல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன் என்று கூறினார்.
சபாநாயகர் தவிப்பு
தொடர்ந்து பேசிய சபாநாயகர் நான் சபையில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதைக் கைவிட்டு, ஒழுங்கான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், உங்கள் பேச்சுகளைத் தொடருமாறு எல்லோரிடமும் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் பேச நேரம் அளித்தால் சபையை எவ்வாறு நடத்துவது? இந்த சபையின் அலுவல்கள் நடக்கவில்லை என்பது தான் தன் மனக்குறை என்று கூறினார்.
குறுக்கிட்ட ரமேஷ்குமார் எம்எல்ஏ
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர்.ரமேஷ் குமார், பலாத்காரம் தவிர்க்க முடியாததாக இருக்கும்போது, நன்றாக சாய்ந்து படுத்து நீங்களும் அனுபவியுங்கள் என்று ஒரு பழமொழி உண்டு. நீங்கள் இருக்கும் நிலையும் அதுதான் என்று சிரித்துக்கொண்டே சபாநாயகரிடம் கூறினார்.
வலுக்கும் கண்டனம்
இதைக்கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். சபாநாயகரின் நிலைமையை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் ஒரு பெண்ணுடன் ஒப்பிட்டு ரமேஷ்குமார் எம்எல்ஏ பேசியது சர்ச்சையாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் குமாரின் பேச்சுக்கு சக காங்கிரஸ் பெண் எம்எல்ஏக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
ரமேஷ்குமார் எம்எல்ஏ பேச்சு
ரமேஷ்குமார் கடந்த 2019ஆம் ஆண்டு சபாநாயகராக இருந்த போது, பலாத்காரம் ஒருமுறைதான் நடந்தது. அதை அப்படியே விட்டிருந்தால் கடந்து போயிருக்கும். பலாத்காரம் நடந்ததாக நீங்கள் புகார் செய்தால், குற்றவாளி சிறையில் அடைக்கப்படுகிறார். ஆனால் அது எப்படி நடந்தது என்று அவரது வழக்கறிஞர்கள் கேட்கிறார்கள். இது எப்போது நடந்தது, எத்தனை முறை? பலாத்காரம் ஒரு முறை நடக்கும் ஆனால் நீதிமன்றத்தில் 100 முறை பலாத்காரம் செய்யப்படுவீர்கள். இதுதான் என் நிலை என்று பேசி சர்ச்சையை கிளப்பினார். இப்போது மீண்டும் சிக்கலான வகையில் பேசி பலரிடமும் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார்.
கவனமாக பேசுவேன்
பலாத்காரத்தை என்ஜாய் செய்யுமாறு கூறிய கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் குமாருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அவர் மன்னிப்பு கோரியுள்ளார். தனது பேச்சு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரமேஷ்குமார் எம்எல்ஏ, தனது அலட்சியமான கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ளார். எனது நோக்கமானது கொடூரமான குற்றத்தை சிறுமைப்படுத்துவதோ அல்லது வெளிச்சம் போடுவதோ அல்ல, என்று கூறியுள்ள ரமேஷ் குமார், இனிமேல் நான் எனது வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேசுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.