ஆரம்பிச்சிட்டாங்க.. ராகுலை வரவேற்ற போஸ்டரை கிழித்த பாஜக! வெளியே நடமாட முடியாது- சித்தராமையா வார்னிங்
பெங்களூர்: கர்நாடகாவில் ராகுல் காந்தியை வரவேற்கும் விதமாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கிழித்ததால் கோபமடைந்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, 'இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாறும் என்றும், பாஜக தலைவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது என்றும்' எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த மாதம் முதல் வாரத்தில் அதாவது கடந்த 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தனது நடைபயணத்தை தொடங்கினார். தமிழகம், கேரளா வழியாக கர்நாடகம் வந்துள்ள ராகுல் காந்தி இன்று கர்நாடகாவில் குண்டலுப்பேட்டை வழியாக நடைபயணம் செல்கிறார்.
"எங்களை தொட்டால்.. பாஜக தலைவர்கள் யாரும் வெளியே நடமாட முடியாது.." ஓப்பனாக எச்சரித்த சித்தராமையா
போஸ்டர்கள் கிழிப்பு
குண்டலுப்பேட்டையில் ராகுல் காந்தியை வரவேற்க அங்குள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். குறிப்பாக வழியெங்கும் ராகுல் காந்தியை வரவேற்க போஸ்டர்களையும் பிளெக்ஸ் போர்டுகளையும் வைத்திருந்தனர். இதனிடையே, காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால், கோபம் அடைந்த காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினரின் செயல்தான் இது என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
சுதந்திரமாக உலவ முடியாது
மேலும் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டது தொடர்பாக உள்ளூர் போலீசில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்தியை வரவேற்க அமைக்கப்பட்டு இருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் கடும் கோபம் அடைந்த அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா, பாஜக தலைவர்கள் சுதந்திரமாக உலவ முடியாது என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடுமையான எச்சரிக்கை விடுகிறேன்
இது குறித்து சித்தராமையா கூறுகையில், ''எங்கள் கட்சியினர் வைத்திருந்த போஸ்டர்களையும் பிளெக்ஸ் போர்டுகளையும் அவர்கள் (பாஜக) சேதப்படுத்தியுள்ளனர். பாஜகவினருக்கு நான் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறேன். அவர்களின் இத்தகைய செயல் தொடர்ந்தால் கர்நாடகாவில் எந்த ஒரு பாஜக தலைவரும் சுதந்திரமாக நடமாட முடியாது. இதை செய்யும் திறன் எங்கள் கட்சியினருக்கு உள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் கர்நாடகாவில் ஆட்சி மாறும். காங்கிரஸ் கட்சி ஆட்சிதான் அமையப் போகிறது. எனவே சில போலீஸ் அதிகாரிகளுக்கு இதை ஒரு எச்சரிக்கையாக விடுக்கிறேன்'' என்றார்.
21 நாட்கள் பாத யாத்திரை
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ராகுல் காந்தியின் பாரத் தோடா யாத்திரை இந்த மாநிலத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் ராகுல் காந்தியின் பாத யாத்திரை நன்கு கைகொடுக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது. கர்நாடக மாநிலத்தில் மட்டும் 21 நாட்கள் ராகுல் காந்தி பாத யாத்திரை செல்கிறார்.