பெங்களூரில் திடீரென பெய்த பணமழை.. ரூபாய் நோட்டுகளை அள்ளிவீசிய நபர்.. ஓடிஓடி எடுத்த மக்கள்-பரபரப்பு
பெங்களூர்: பெங்களூரில் இன்று திடீரென்று பணமழை பெய்தது. கேஆர் மார்க்கெட் பகுதியில் செல்லும் மேம்பாலத்தில் இருந்து இன்று ஒருவர் ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசினார். மேம்பாலத்தில் இருந்து பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் ஓடிஓடி சேகரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நபர் யார்? எதற்காக ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசினார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் நகரில் சாம்ராஜ்பேட்டையில் கேஆர் மார்க்கெட் உள்ளது. பெங்களூரில் மிகப்பெரிய மார்க்கெட்டாக இது அறியப்படும் நிலையில் பழம், காய்கறி, பூ உள்பட அனைத்து வகை பொருட்களும் இந்த மார்க்கெட்டில் கிடைக்கும்.

இதனால் கேஆர் மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இதனால் மார்க்கெட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இன்று காலையில் வழக்கம்போல் கேஆர் மார்க்கெட் மேம்பாலம் மற்றும் அதன் அடியில் செல்லும் ரோட்டில் மக்கள் இயங்கி கொண்டிருந்தன. ஏராளமான வாகனங்களும் சென்று வந்தன. இந்நிலையில் தான் இன்று காலையில் கருப்பு பிளேசர் மற்றும் பேண்ட் அணிந்து மோட்டார் சைக்கிளில் ஒருவர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அதன்பிறகு திடீரென்று பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர் அதில் இருந்து கீழே இறங்கினார். அந்த நபர் தனது கழுத்தில் பெயிர கடிகாரத்தை தொங்கவிட்டு இருந்தார். அதன்பிறகு அவர் வைத்திருந்த பையை எடுத்து அதில் இருந்த ரூபாய் நோட்டுகளை அள்ளி காற்றில் பறக்கவிட்டார். இந்த நோட்டுகள் பாலத்தின் அடியில் விழுந்தன. அங்கு சிக்னலில் காத்திருந்தவர்கள் உடனடியாக தங்களின் வாகனங்களில் இருந்து இறங்கி ரோட்டில் விழுந்த ரூபாய் நோட்டுகளை ஓடிஓடி சேகரித்தனர்.

இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேல் இருந்து வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலானவை ரூ.10 ஆக இருந்தன. இருப்பினும் பொதுமக்கள் அதனை ஆர்வமாக சேகரித்தனர். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
இந்த விசாரணையில் மேம்பாலத்தில் இருந்து பணத்தை அள்ளிவீசிய நபர் அருண் என்பதும், அவர் ஒரு கபடி வீரர் என்பதும் தெரியவந்தது. தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான ரூ.10 நோட்டுகளை பாலத்தில் இருந்து அள்ளிவீசியதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications