அதிர்ச்சி.. தலித் என்பதாலேயே என்னை கோவிலுக்கு அனுமதிக்கவில்லை! கர்நாடக காங். மூத்த தலைவர் வருத்தம்
பெங்களூர்: ‛‛பிஎச்டி முடித்து இருந்தாலும், எம்எல்ஏ, அமைச்சர், துணை முதல்வர் பதவி வகித்து இருந்தாலும் கூட தலித் என்பதாலே நான் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை'' என கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான பரமேஸ்வர் வருத்தமாக கூறினார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் பரமேஸ்வர். இவர் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும், அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.
மேலும் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதாளம் கட்சியின் கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்வராக இருந்தார். அப்போது பரமேஸ்வர் துணை முதல்வராக செயல்பட்டார். தற்போது அவர் எம்எல்ஏவாக உள்ளார்.

அம்பேத்கர் ஜெயந்தி விழா
இந்நிலையில் நேற்று பெங்களூருவில் அம்பேத்கர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் பரமேஸ்வர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது தலித் என்பதாலே தான் கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை என வருத்தமாக கூறினார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:

கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை
நான் பிஎச்டி முடித்துள்ளேன். பல வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளேன். எம்எல்ஏ, அமைச்சராக இருந்ததோடு, துணை முதல்வர் பொறுப்பையும் வகித்து இருக்கிறேன். துணை முதல்வர் பொறுப்பு என்பது மாநிலத்தில் 2வது பெரிய பதவியாகும். இருப்பினும் என்னை கோவில்களுக்குள் அனுமதிக்கவில்லை. நான் கோவில் நோக்கி சென்றால் அங்கு போவதற்குள் வந்து ஆரத்தி காண்பிக்கின்றனர். கோவிலில் உள்ள சுவாமி அருகே என்னை செல்ல விடுவது இல்லை. இப்போதும் கூட இத்தகைய நிலை உள்ளது. இதை என்னவென்று கூற?.

நாய் அனுமதிக்கப்படுகிறது
இதுபோன்ற சம்பவங்களில் உலகில் உள்ள பிற நாடுகளில் எங்கும் நடந்ததாக பார்த்ததும் இல்லை. கேட்டதும் இ்லலை. குளத்துக்கு சென்று நாயால் தண்ணீர் குடிக்க முடிகிறது. ஆனால் தலித் மக்களுக்கு இன்னும் சில குடிநீர் தொட்டில குளங்களில் தண்ணீர் பயன்படுத்த அனுமதியில்லை. இத்தகைய பாகுபாடும் இன்றும் உள்ளது. இதற்கு உதாரணமாக நிறைய விஷயங்களை கூறலாம்.

கலப்பு திருமணம் செய்தால் கொலை
கலப்பு திருமணம் செய்தால் ஜாதி ஒழியும் என பசவண்ணர் இதற்கு முன்பு அதை நடத்தி கட்டினார். ஆனால் இன்று ஜாதிவிட்டு ஜாதி திருமணம் செய்தால் அவர்களை கொலை செய்வதும், குடும்பத்தினர் தற்கொலை செய்வதையும் கண்களால் பார்க்க முடிகிறது. பாகுபாடு கூடாது என பேசும் நாம் அனைவரும் இதுபற்றியும் சிந்தித்து பார்க்க வேண்டும்'' என வருத்தமாக கூறினார்.

யார் இந்த பரமேஸ்வர்
இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் தற்போது துமகூரு மாவட்டம் கொரட்டக்கெரே சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். 5 முறை எம்எல்ஏவாகவும், பல முறை அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார். ஒரு முறை துணை முதல்வராக பொறுப்பு வகித்த அனுபவம் கொண்டவர். மேலும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும் 5 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தார். இவர் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டுவில் உள்ள வெயிட் அக்ரிகல்சன் ஆராய்ச்சி மைய பல்கலைக்கழகத்தில் ‛பிளன்ட் பிசியாலஜி' துறையில் பிஎச்டி முடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications