கர்நாடகா முதல்வராகும் டிகே சிவக்குமார்? பதவியை இழக்கும் சித்தராமையா? மகன் யதீந்திரா சொன்ன தகவல்
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது கடைசி கட்ட அரசியலில் இருக்கிறார். அவர் பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிகோளிக்கு ஆலோசகராக இருக்க வேண்டும் என்று மகன் யதீந்திர சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடகாவில் முதல்வர் பதவியை எட்டிப்பிடிக்க டிகே சிவக்குமார் முயன்று வருகிறார். இந்நிலையில் தான் யதீந்திர சித்தராமையாவின் இந்த கருத்து கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, சித்தராமையாவிடம் இருந்து கர்நாடகா முதல்வர் பதவி பறிக்கப்படுகிறதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார். டிகே சிவக்குமார் தான் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த 2023ம் ஆண்டில் கர்நாடகா சட்டசபை தேர்தலிலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

அப்போது சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. காங்கிரஸ் தலைவராக டிகே சிவக்குமார் செயல்பட்டு வந்தார். இதனால் தனக்கு முதல்வர் பதவியை தர வேண்டும் என்று மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்தார். இருப்பினும் மேலிடம் மூத்த தலைவர் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியை வழங்கியது.
அந்த சமயத்தில் ஒரு தகவல் வெளியானது. அதாவது முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமாரும் முதல்வராக தொடர்வார்கள் என்று தகவல் பரவியது. இது இன்று வரை அவ்வப்போது பேசும் பொருளாகி வருகிறது. அதன்படி பார்த்தால் இந்த ஆண்டு இறுதியில் முதல்வர் பதவி டிகே சிவக்குமார் வசம் செல்ல வேண்டும். ஆனால் இந்த இரண்டரை ஆண்டு காலபதவி பற்றி சித்தராமையா, டிகே சிவக்குமார், காங்கிரஸ் மேலிடம் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
இதானல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் தற்போது டிகே சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்ற வேண்டும். சித்தராமையாவுக்கு பதில் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதற்கு சித்தராமையா தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் சில வாரங்களுக்கு முன்பு கூட சித்தராமையா அளித்த பேட்டியில், ‛‛5 ஆண்டுகளும் முழுமையாக நானே முதல்வராக இருப்பேன்'' என்றார். இருப்பினும் இந்த சர்ச்சை முடிவுக்கு வரவில்லை.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருபிரிவாக செயல்பட்டு வருகின்றனர். சித்தராமையாவுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், டிகே சிவக்குமாருக்கு ஆதரவாக ஒரு தரப்பினராகவும் செயல்பட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் தான் சித்தராமையாவின் மகனும், எம்எல்சியுமான யதீந்திர சித்தராமையா இன்று ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையில் இறுதிக்கட்டத்தில் உள்ளார். அவரதுஅரசியல் பயணம் சதீஷ் ஜார்கிகோளி உள்ளிட்டவர்களுக்கு ஆலோசகராக தொடர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
யதீந்திர சித்தராமையாவின் இந்த கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்தராமையாவிடம் இருந்து முதல்வர் பதவியை பறித்து காங்கிரஸ் மேலிடம் டிகே சிவக்குமார் வசம் வழங்க உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. சதீஷ் ஜார்கிகோளி, முதல்வர் சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளர் அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர். இருவருக்கும் இடையே நீண்ட, நெடிய பந்தம் உள்ளது. இதனால் தான் அவருக்கு ஆலோசனைகளை வழங்கும் வகையில் சித்தராமையா செயல்பட வேண்டும் என்று மகன் யதீந்திர சித்தராமையா கூறியுள்ளார். இருப்பினும் அவரது இந்த கருத்து தற்போது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, சித்தராமையா விரைவில் ஓரம்கட்டப்படுகிறாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications