கர்நாடகா: பைக்கில் 2 ஆண்கள் செல்ல தடை! தட்சிண கன்னடா மாவட்டத்தில் நாளை முதல் அமல்.. பின்னணி இதுதான்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் நாளை முதல் ஒருவாரம் பைக்கில் இரு ஆண்கள் சேர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையை போலீசார் அமல்படுத்த முடிவு செய்ததன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது.
கர்நாடகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் ஒன்று தட்சின கன்னடா. பரபரப்புக்கு எப்போதும் பஞ்சமில்லாத இந்த மாவட்டம் கர்நாடகத்தில் பெங்களூருக்கு அடுத்தபடியாக அடிக்கடி தலைப்பு செய்தியாக இடம் பெறும்.
சமீபத்தில் கூட உடுப்பியை தொடர்ந்து தட்சின கன்னடா மாவட்டத்தில் ஹிஜாப் பிரச்சனை பூதாகரமானது. அதன்பிறகு மாவட்டத்தின் மங்களூரில் பிரபல கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் லிப்லாக் சேலஞ்ச் நடத்திய வீடியோ வெளியாகி சர்ச்சையானது.

10 நாளுக்குள் மூன்று பேர் படுகொலை
இதன் தொடர்ச்சியாக தற்போது தொடர்ந்து மாவட்டத்தில் கொலைகள் நடந்து வருகின்றன. தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா அருகே பெல்லாரேவை சேர்ந்த மசூத் 19, என்பவர் கடந்த மாதம் 21ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் அதேபகுதியை சேர்ந்த பாஜக இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் பிரவீன், 30, கடந்த மாதம் 26ம் தேதி இரவில் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு கடந்த 28ம் தேதி மங்களூரின் சூரத்கல்லில் பாசில் 30, என்பவர் படுகொலை செய்யப்பட்டார். 10 நாளுக்குள் வெறும் 8 நாளில் மாவட்டத்தில் 3 படுகொலை சம்பவங்கள் நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ச்சியாக பதற்றமான சூழல் நிலவியது.

அதிகரித்த பதற்றம்
மேலும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர். சமூக வலைதளங்கள் மூலம் மத கலவரத்தை துாண்ட முயற்சி நடக்கலாம் என்பதால் அதனை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இரவு நேர ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொலைகள் தொடர்பாக தொடர்ச்சியாக போலீசார் விசாரணை நடத்தி கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் மாவட்டத்தில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை என கூறப்படுகிறது.

ஏடிஜிபி ஆலோசனை
இந்நிலையில் தான் இன்று ஏடிஜிபி அலோக் குமார் இன்று தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் சென்றார். மங்களூர் போலீஸ் கமிஷனர் சசிகுமாருடன் அவர் ஆலோசனை நடத்தினார். கொலை வழக்கு விசாரணை, கைது பற்றிய விபரங்களை அவர் கேட்டறிந்தார். மேலும், மங்களூர் நகரில் நிலவும் அசாதாரணமாக சூழலை மாற்றுவது பற்றி சில அறிவுரைகளை அவர் வழங்கினார். இதையடுத்து ஏடிஜிபி அலோக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பைக்கில் இரு ஆண்கள் செல்ல தடை
நாளை முதல் மங்களூர் உள்பட மாவட்டம் முழுவதும் பைக்கில் இரு ஆண்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த விதிமுறை என்பது தட்சிண கன்னடா மாவட்டத்துக்கு மட்டும் பொருந்தும். இருப்பினும் மாவட்டத்தில் 18 வயதுக்குள்ளானவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்களோடு டூவீலரில் பயணிக்கலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. பைக்கின் பின்இருக்கையில் இருப்போர் தான் பெரும்பலான குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். இதனை தடுக்கவே இந்த புதிய நடைமுறை அமலாக உள்ளது. இந்த புதிய நடைமுறை மாவட்டத்தில் ஒருவாரம் நடைமுறையில் இருக்கும். இந்தியாவின் பிற மாநிலங்களில் இதற்கு முன்பு இத்தகைய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications