தேர்தல் அரசியலுக்கு குட்பை சொன்ன எடியூரப்பா! சிகாரிபுரா தொகுதியை மகனுக்கு தாரைவார்ப்பதாக அறிவிப்பு!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் இனி தாம் போட்டியிடப் போவது இல்லை என்று அம்மாநில முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும் தமது சிகாரிபுரா தொகுதியில் இனி மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் 2019-ம் ஆண்டு முதல்வராக இருந்த குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்தது பாஜக. அப்போது பாஜகவின் எடியூரப்பா முதல்வரானார். இருந்த போதும் எடியூரப்பாவுக்கு 78 வயதாகிவிட்டது; அவரது மகன் விஜயேந்திரா நிழல் முதல்வராக செயல்படுகிறார் என்கிற விமர்சனங்களை பாஜக சீனியர் அமைச்சர்களே முன்வைத்து வந்தனர்.

எடியூரப்பா பதவி ராஜினாமா
இருந்தபோதும் 2 ஆண்டுகள் முதல்வர் பதவியில் நீடித்தார் எடியூரப்பா. அதன்பின்னர் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் எடியூரப்பா. அப்போது பேசிய அவர், பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு பதவிகள் வழங்கப்படுவதில்லை. ஆனாலும் எனக்கு முதல்வர் பதவியை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்கினர். இப்போது 2 ஆண்டுகாலம் பதவியை நிறைவு செய்துவிட்டேன் என கூறியிருந்தார்.

பாஜக பாலிசி
பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய அரசியல் ஓய்வு வழங்கப்படுவது வழக்கம். பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அத்வானி தொடங்கி பலருக்கும் இந்த கதிதான். அதனைத்தான் எடியூரப்பா சுட்டிக்காட்டியிருந்தார். பின்னர் பசவராஜ் பொம்மை, கர்நாடகாவின் புதிய முதல்வரானார்.

தேர்தல் அரசியலுக்கு குட்பை
இந்த நிலையில் எடியூரப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். செய்தியாளர்களிடம் எடியூரப்பா கூறியதாவது: நான் இனி தேர்தல்களில் போட்டியிடப் போவது இல்லை. சிகாரிபுரா தொகுதியில் மகன் விஜயேந்திரா போட்டியிடுவார். என்னைவிட விஜயேந்திராவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சிகாரிபுரா தொகுதி மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர்களின் கரம்பிடித்து கேட்டுக் கொள்கிறேன். தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விஜயேந்திராவே இனி சிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுவார் என்றார்.

எடியூரப்பா மகன் விஜயேந்திரா
கர்நாடகா பாஜகவின் துணைத் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு விஜயேந்திரா நியமிக்கப்பட்டார். முன்னதாக கர்நாடகா பாஜகவின் மாநில இளைஞரணிச் செயலாளராகவும் இருந்தார். அண்மையில் கர்நாடகா சட்டமேலவை தேர்தலில் தமக்கு சீட் வழங்கப்படாததால் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார் விஜயேந்திரா.












Click it and Unblock the Notifications