Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயிரை பணயம் வச்சு..கேஜிஎஃப்-ல் சல்லடை போட்டு சலிக்கும் கன்னடர்கள்! ஒரு கிராம் கிடைச்சா கூட போதுமாம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் கோலார் தங்க வயல் கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ் ( கேஜிஎஃப்) பகுதியில் தங்கச் சுரங்கங்கள் மூடப்பட்டு 25 ஆண்டுகள் கடந்தும், தங்கம் கலந்த மண்ணை சட்டவிரோதமாக சேகரிக்கும் சம்பவங்கள் தொடர்ந்தே வருகின்றன. சமீபத்தில் நடந்த இரண்டு தனி நடவடிக்கைகளில், தடை செய்யப்பட்ட சுரங்கப் பகுதிக்குள் நுழைந்து தங்கம் கலந்த மண்ணை திருடியதாக 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து மர்ம நபர்கள் புக முயற்சி செய்து வரும் நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சுரங்கப் பகுதிகள் முன்பு பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டவை. நிறுவனம் மூடப்பட்ட பிறகும், அங்கு மீதமுள்ள மண் மற்றும் கழிவுகளில் தங்கத் துகள் இருக்கலாம் என்ற நம்பிக்கையால் பலர் சட்டவிரோதமாக அந்தப் பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றனர்.

முதல் சம்பவம் பிப்ரவரி 6ஆம் தேதி நடந்தது. பாதுகாப்பு பணியாளராக பணியாற்றும் தியாகவேலு, கிரிஃபோர்ட் ஷாஃப்ட் பகுதியின் உள்ளே எட்டு பேர் இருப்பதை கவனித்தார். அவர்கள் பாதுகாப்பு வேலியை வெட்டி உடைத்து உள்ளே நுழைந்து, தங்கத் துகள் இருக்கலாம் என நம்பப்படும் மண்ணை மூட்டைகளில் நிரப்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

Gold Hunt KGF gold

கோலார் தங்க வயல்

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று அந்த எட்டு பேரையும் கைது செய்தனர். இதற்கு நான்கு நாட்கள் கழித்து, பிப்ரவரி 10ஆம் தேதி, இதே போன்ற இன்னொரு சம்பவம் நடந்தது. பாதுகாப்பு காவலராக பணிபுரியும் சங்கர், மற்றொரு குழு தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய முயற்சிப்பதை கவனித்தார். அவர்களும் மண்ணை சேகரிக்க முயன்றபோது போலீசார் அவர்களை கைது செய்து ஊர்காம் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

கேஜிஎஃப் தங்க வேட்டை

இது தொடர்பாக போலீசார் கூறும் போது, தங்கத்தின் விலை அதிகரித்திருப்பதால் இந்த முயற்சிகள் அதிகரித்துள்ளன. தங்கம் கலந்த மண்ணில் மிகச் சிறிய அளவிலாவது தங்கத் துகள் கிடைத்தாலும் அதை வேதியியல் முறையில் பிரித்து விற்றால் விரைவாக பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. அதனால் இரவு நேரங்களில் வேலியை வெட்டி உள்ளே நுழைந்து மண்ணை சேகரிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையில், மண்ணிலிருந்து சிறிய அளவிலான தங்கத் துகள்களை பிரித்து உள்ளூர் நகைக்கடைகளுக்கு விற்றதாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக சட்டவிரோத சுரங்கம்

இந்த விவகாரம் குறித்து பேசிய காவல் ஆய்வாளர் மார்கொண்டையா," சுரங்கம் செயல்பட்ட காலத்தில் ஒரு டன் தங்கச் சுரங்கக் கற்களிலிருந்து மூன்று முதல் நான்கு கிராம் வரை தங்கம் கிடைத்ததாக கூறினார். தற்போது கூட பழைய கழிவுகளில் தங்கம் இருக்கலாம் என்ற நம்பிக்கையே இந்தச் செயல்களுக்கு காரணமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், நகைக்கடைகளின் அருகே உள்ள கழிவுநீரோட்டங்களில் கூட தங்கத் தூள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் மண் சேகரிக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருப்பதாக வேலாயுதம் என்ற வழக்கறிஞர் கூறியுள்ளார்.

தங்கம் விலை

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிராம் கிடைத்தாலே போதும் என்ற ஆசை பலரை அபாயத்தை ஏற்க தூண்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கைது செய்யப்பட்டவர்களில் பலர் இதற்கு முன்பும் இதே குற்றத்தில் ஈடுபட்டவர்கள். எச்சரிக்கை அளிக்கப்பட்ட பின்னரும் அவர்கள் மீண்டும் மீண்டும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைகின்றனர். சுரங்கப் பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான கழிவு மேடுகள், அங்கு இன்னும் தங்கம் புதைந்து கிடக்கிறது என்ற நம்பிக்கையை மக்களிடம் உருவாக்கியுள்ளது.

விபத்து அபாயம்

ஆனால் இந்த முயற்சிகள் ஆபத்தானவையாக இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மூடப்பட்ட சுரங்கங்களில் நுழையும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம். 2020ஆம் ஆண்டு மே மாதத்தில், மூடப்பட்ட சுரங்கக் கிணற்றுக்குள் நுழைந்த மூவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டாலும், தங்கத்தின் மீது உள்ள ஆசை காரணமாக சட்டவிரோத நுழைவுகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படவில்லை. தடை செய்யப்பட்ட பகுதிகளில் நுழைவது உயிர் அபாயத்தையும் சட்ட நடவடிக்கைகளையும் ஏற்படுத்தும் என்று போலீசார் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+