40 பைசா வழக்கு... ஓட்டலுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவு... நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பெங்களூர்: பெங்களூர் தனியார் ஓட்டலில் 40 பைசா அதிகமாக வசூலித்ததாக ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், மத்திய அரசின் சுற்றறிக்கையை மேற்கொள் காட்டிய நீதிமன்றம் நிவாரணம், வழக்காடு செலவாக ஓட்டலுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க அந்த நபருக்கு உத்தரவிட்டது.
பெங்களூரு சென்ட்ரல் தெருவில் உள்ள தனியார் ஓட்டலில் மூர்த்தி என்பவர் உணவு வாங்கினார். இதற்கு ரூ.264.60 பில் வழங்கப்பட்டது. ஆனால் அவரிடம் இருந்து ரூ.265 வசூலிக்கப்பட்டது.
40 பைசா அதிகம் வசூலிக்கப்பட்டது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். ஓட்டல் நிர்வாகம் சார்பில் அவரிடம் சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு
இதனால் கோபமடைந்த மூர்த்தி பெங்களூருவில் உள்ள நுகர்வோர் கோர்ட்டில் 2021 மே 21ல் மனு செய்தார். அதில், ஓட்டலின் பெயரை குறிப்பிட்டு நடந்த சம்பவத்தை விளக்கி இருந்தார். மேலும் நுகர்வோரிடம் இருந்து கூடுதல் பணம் வசூலிப்பதாக தெரிவித்து இருந்தார். அதோடு தன்னிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட 40 பைசாவுக்கு நியாயம் வழங்க வேண்டும். ஒரு ரூபாய் மட்டும் நிவாரணம் பெற்று தர வேண்டும் என கூறியிருந்தார்.

வக்கீல்கள் வாதம்
இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. ஓட்டல் நிர்வாகம் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர். அப்போது, ‛உணவுக்காக கூடுதலாக காசு வசூலிக்கப்படவில்லை. வரி விதிப்பின் அடிப்படையில் தான் ரவுண்ட்டாக காசு வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 பிரிவு 170ல் அனுமதி உள்ளது. இதில் விதிமீறல் எதுவும் இல்லை' என்றனர்.

சுற்றறிக்கை மேற்கொள்...
இதையடுத்து நீதிமன்றம் மத்திய அரசின் சுற்றறிக்கையை மேற்கொள் காட்டி தீர்ப்பு வழங்கியது. அதாவது, ‛‛ஒரு ரூபாயில் 50 பைசாவுக்கு உட்பட்ட தொகை வந்தால் அதை நுகர்வோர் வழங்க வேண்டாம். 50 பைசாவிற்கு அதிகமான தொகை வந்தால் அதை ஒரு ரூபாயாக மாற்றி வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரூ.264.60க்கு ரூ.265 வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த குறைபாடும் இல்லை '' என நீதிமன்றம் குறிப்பிட்டது.

ரூ.4 ஆயிரம் வழங்க..
மேலும் ‛‛இந்த வழக்கு தன்னை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக கருத தோன்றுகிறது. இதனால் புகார்தாரருக்கு நிவாரணம் எதுவும் வழங்க முடியாது. மாறாக புகார்தாரர் ஓட்டல் நிர்வாகத்துக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணமாகமும், ரூ.2 ஆயிரம் வழக்காடு செலவாகவும் வழங்க வேண்டும். இந்த ரூ.4 ஆயிரத்தை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications