இந்தியாவின் முதல் ஓமிக்ரான் நோயாளி.. தற்போது எங்கே இருக்கிறார் தெரியுமா? வெளியான பரபர தகவல்
பெங்களூரு: கர்நாடகாவில் 2 பேருக்கு ஓமிக்ரான் உருமாறிய கொரோனா இருப்பது உறுதியான நிலையில், அவர்களில் ஒருவரான தென் ஆப்பிரிக்கப் பயணி தற்போது எங்கே உள்ளார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video
கொரோனா வைரசை இன்னும் எந்த நாடும் முழுமையாக ஒழிக்கவில்லை. இருப்பினும், வேக்சின் பணிகள் காரணமாகக் கடந்த சில மாதங்களாகவே உலகில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது.
இந்தச் சூழலில் கடந்த நவ. இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. இதனால் ஜப்பான், இஸ்ரேல் போன்ற நாடுகள் வெளிநாட்டினருக்குத் தடை விதித்துள்ளன.
ஓமிக்ரான் கொரோனா
உலக சுகாதார அமைப்பு இந்த உருமாறிய கொரோனாவுக்கு ஓமிக்ரான் என்று பெயரிட்டுள்ளது. மேலும், கவலைக்குரிய கொரோனா வகையாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பல நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இருந்தாலும் கூட, ஓமிக்ரான் வைரஸ் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. அமெரிக்காவில் முதல் ஓமிக்ரான் பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் ஓமிக்ரான்
இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே இன்று இந்தியாவிலும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் இரண்டு பேருக்கு இந்த புதிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்தது. அவர்களில் ஒருவர் பெங்களூருவில் சுகாதார ஊழியராக பணிபுரிபவர் என்பது தெரிய வந்துள்ளது.
தென் ஆப்பிரிக்க பயணி
அதேநேரம் மற்றொருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் ஆவர். கடந்த நவ. 20ஆம் தேதி அந்த நபர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உடன் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்துள்ளார். இருப்பினும், பெங்களூரு விமான நிலையத்தில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் அருகிலுள்ள தனியார் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டார். அவர் 2 டோஸ் வேக்சின் போட்டிருந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
லேசான பாதிப்பு
இதையடுத்து கர்நாடக அரசு மருத்துவர் ஒருவர் விடுதியில் இருந்த அந்த வெளிநாட்டுப் பயணியைப் பரிசோதித்துள்ளார். அதில் அவருக்கு எவ்வித கொரோனா அறிகுறிகளும் இல்லை. இதனால் இன்னும் சில நாட்கள் சுயதனிமையில் இருக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அவர் ஆபத்தான நாடுகள் எனப் பட்டியலிடப்பட்ட நாடுகளில் இருந்து வந்தவர் என்பதால் அவரது மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
துபாய்
அந்த சோதனை முடிவுகள் வருவதற்குள்ள தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் நவ. 23ஆம் தேதி தனியார் பரிசோதனை நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு நெகடிவ் என்று முடிவுகள் வந்துள்ளது. இதையடுத்து கடந்த நவ. 27ஆம் தேதி அந்த நபர் விடுதியில் இருந்து செக் அவுட் செய்துவிட்டு, விமானம் மூலம் துபாய் சென்றுள்ளார். அவருக்கு ஓமிக்ரான் கொரோனா என்பது இன்று (டிச.2) தான் உறுதியானது என்பதால் அவரை தடுத்து நிறுத்த முடியவில்லை என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்பில் இருந்தவர்கள்
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், அந்த தென் ஆப்பிரிக்கப் பயணியின் பெயர் உள்ளிட்ட இதர தகவல்களை வெளியிடவில்லை. அதேநேரம் அவருடன் தொடர்பில் இருந்த 24 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் நெகடிவ் என்றே முடிவு வந்துள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேபோல 240 secondary contactsக்கும் கொரோனா நெகட்டிவ் என்றே முடிவுகள் வந்துள்ளன.
ஆபத்தானதா?
இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளில் சில மாற்றங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பும் இந்த ஓமிக்ரான் கொரோனா வகையைக் கவலைக்குரிய கொரோனா வகையாக பட்டிலயிட்டுள்ளது. அதேநேரம் இந்த கொரோனா எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதியா தெரியவில்லை.