கர்நாடகாவில் திடீரென கோயிலுக்குள் ஓடிய 2வயது தலித் குழந்தை .. ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கொடுமை
பெங்களூரு: கர்நாடகாவில் 2வயது தலித் குழந்தை கோயிலுக்குள் சென்றதற்காக பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த அர்ச்சகர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தலித் குழந்தை வந்ததற்காக, கோயில் தீட்டு ஆகியுள்ளதாக கூறி சுத்தப்படுத்திய கொடுமையும் நடந்திருக்கிறது.
சிம்மராசி என்ற படம் நேற்று ஒளிப்பரப்பானது. அந்த படத்தில் ஜாதி வெறி பிடித்த வில்லனாக ஆனந்த்ராஜ் நடித்திருப்பார். அதில் ஒரு குழந்தை பந்தை எடுப்பதற்காக தீயில் விழப்போகும். அதை தடுக்க முயன்ற தலித் வேலைக்காரர் உடனே வீட்டிற்குள் ஓடிச்சென்று குழந்தையை தூக்குவார். இதை பார்த்து கொதிப்படையும் ஆனந்த்ராஜ், அவரை அடித்து உதைத்து கொடுமை செய்வார். இப்படிப்பட்ட கொடுமைகள் தமிழகத்தில் தற்போது எங்கும் நடக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை.
அதேநேரம் இப்படியாக கொடுமைகள் இன்னமும் இந்தியாவில் பல இடங்களில் நடக்கிறது. பல்வேறு மாநிலங்களில் இன்னமும் தலித் மக்கள் கிராமப்புற கோயில்களுக்குள் சென்று வழிபடும் உரிமைகள் இல்லை என்பது 21ம் நூற்றாண்டில் நடக்கும் மிகப்பெரிய அநீதி. அப்படி ஒரு அநீதி கர்நாடகாவில் நடந்துள்ளது.
கோவை தலித் அரசு ஊழியர் காலில் விழுந்தது ஏன்? புதிய வீடியோ காட்டும் தலைகீழ் திருப்பம்
பிறந்த நாள்
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள மியா பூராவை சேர்ந்தவர் சந்துரு (30). இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். கடந்த செப்டம்பர் 4-ம் தேதி தனது 2 வயது குழந்தையின் பிறந்த நாளையொட்டி அதே ஊரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த கோயிலில் தலித் மக்கள் நுழைய அனுமதி இல்லை. இதனால் கோயிலுக்கு வெளியே நின்று வழிபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக 2 வயது குழந்தை கோயிலுக்குள் ஓடிவிட்டது.
கோயில் தூய்மை
அதை பார்த்த அர்ச்சகர் கனகப்பா பூஜாரி, தலித் குழந்தை நுழைந்ததால் கோயில் தீட்டாகி விட்டதாக ஊர் பஞ்சாயத்து குழுவைச் சேர்ந்த ஹனுமா கவுடா, விருப்பாக்ஷா கவுடா உள்ளிட்டோரிடம் புகார் கூறி இருக்கிறார். இதையடுத்து, கோயிலை தூய்மைப்படுத்த ரூ.25 ஆயிரம் அபராதம் செலுத்த சந்துருவுக்கு ஊர் பஞ்சாயத்து உத்தரவு பிறப்பித்தது.
போராட்டம் நடந்தது
இதுகுறித்து சந்துரு புகார் அளித்தும் போலீஸார் ஏற்கவில்லை. இந்த விவகாரம் தலித் சங்கர்ஷ சமிதிக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் கொப்பல் மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் தலித் மக்களுக்கு வழிபாட்டு உரிமை கோரி கடந்த 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சமூக நல ஆணையர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.
12 பேர் மீது வழக்கு
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணைக்குப் பிறகு கனகப்பா பூஜாரி, ஹனுமா கவுடா, விருப்பாக்ஷா கவுடா உள்ளிட்ட 12 பேர் மீது எஸ்.சி, எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். கனகப்பா பூஜாரி, ஹனுமா கவுடா உள்ளிட்ட 5 பேரை நேற்று கைது செய்தார்கள். கர்நாடகாவில் மட்டுமல்ல, இன்னும் பல்வேறு கிராமபுறங்களில் தலித்துகள் உயர் ஜாதியினர் கட்டியுள்ள கோயில்களில் வழிபாடு செய்ய உரிமை இல்லை என்பது கசப்பான உண்மை.