காவிரி விவகாரம்.. கர்நாடகாவில் ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள்.. பிரதமரை சந்தித்து முறையிட திட்டம்
பெங்களூரு: காவிரி பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்துக்கட்சி குழுவை டெல்லி அழைத்து செல்வது குறித்து முடிவு செய்யப்பட்டதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகாவில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்வதில் வறட்சி காலங்களில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. ஜூன் மாதமும் ஆகஸ்ட் மாதமும் மழை சரியாக பெய்யவில்லை. ஜூலையில் மட்டுமே ஓரளவு மழை பெய்துள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட்டு மாதம் தமிழகத்திற்கு 52 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் நீர் குறைவான அளவே இருப்பதால் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
தற்போது உள்ள 54 டிஎம்சி நீரை வைத்து பெங்களூரு, மண்டியா, மைசூரு, ராமநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே முடியாது இந்த சூழலில் தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்ததை தொடர்ந்து கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டது.
ஆனால் இந்த நீர் போதாது எனவும், கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 52 டி.எம்.சி. நீரை திறக்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த 14-ந் தேதி வழக்கு தாக்கல் செய்தது.
இதைத்தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து கடந்த 6 நாட்களாக வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடிக் கும் மேல் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது தண்ணீர் திறப்பு 13 ஆயிரம் கனஅடி என்கிற அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசியல் கட்சியினர், விவசாய மற்றும் கன்னட அமைப்பினா் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தண்ணீர் திறந்துவிடும் கர்நாடாக மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து, எதிர்க்கட்சியான பாஜக மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மண்டியா மாவட்டத்தில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டன.
போதிய மழை பெய்யாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி தண்ணீர் திறக்கக்கூடாது என்று கர்நாடா எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. கர்நாடக விவசாயிகளின் நலன் காக்க வேண்டும் என்பதால், தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது என்றும் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் வலியுறுத்துகின்றன. இதனிடையே தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் 23-ந் தேதி (இன்று) நடைபெறும் என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவித்தார். அதன்படி கா்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது.
முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர்கள் குமாரசாமி, பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தகவுடா, முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகள், பெங்களூரு எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட எம்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நேற்றைய கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது பற்றி தற்போது உள்ள நிலை குறித்து விவாதித்தனர். மேலும் 'போதிய மழை பெய்யாததால் சிக்கல்' சூத்திரத்தை பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. மேகதாது திட்டம் குறித்தும் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசும் போது, அனைத்து கட்சி த கூட்டத்தில் காவிரி நீர் பிரச்சினை, மேகதாது திட்டம், மகதாயி பிரச்சினை குறித்து விவாதித்தோம். கர்நாடகத்தில் தற்போது போதிய மழை பெய்யாதது குறித்தும், தற்போது உள்ள உண்மை நிலை பற்றியும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விவரித்தார்.
காவிரியில் தண்ணீர் திறக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் கர்நாடகம் தரப்பில் எந்த மாதிரியான கருத்துகளை எடுத்து வைக்கலாம் என்பது குறித்து சட்ட நிபுணர்கள் ஆலோசனை கூறினர். மேலும் இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர்கள் கர்நாடக அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடப்பாண்டில் இந்த மாதம் (ஆகஸ்டு) வரை 86.38 டி.எம்.சி. தண்ணீரை நாங்கள் தமிழகத்திற்கு திறந்திருக்க வேண்டும். அதாவது, கடந்த ஜூன் மாதம் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் 2.08 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி. நீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் 8.74 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பு மாதத்தில் (ஆகஸ்டு) 45.95 டி.எம்.சி. தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் 12.47 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. ஆகமொத்தம் இதுவரை 24 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி படுகையில் மழை இல்லாததால் போதிய அளவு தண்ணீர் திறக்க முடியவில்லை. 5-6 ஆண்டுகளுக்கு ஒருமுறை மழை பற்றாக்குறை ஏற்பட்டு இத்தகைய இடர்பாடான நிலை ஏற்படுகிறது. அதுபோல் இந்த ஆண்டு இடர்பாடு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கா்நாடகம் சார்பில் எங்கள் நிலையை எடுத்துரைத்தோம். அவர்கள், வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கும்படி உத்தரவிட்டனர். அந்த அளவுக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறினோம். இதையடுத்து நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைத்து உத்தரவிட்டனர். அதனையும் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டிருக்கிறோம்.
மேட்டூர் அணையில் 63 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. தமிழகத்திற்கு குறுவை சாகுபடிக்கு 32 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே போதுமானது. ஆனால் அவர்கள் அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்து 60 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீரை பயன்படுத்தி இருக்கிறார்கள். ேமட்டூர் அணையில் இன்னும் தண்ணீர் உள்ளது. ஆனாலும் நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிடம் கேட்கிறார்கள்.
கர்நாடக விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். உச்சநீதிமன்றத்தில் எங்கள் நிலையை எடுத்து கூறுவோம். மேகதாதுவில் புதிய அணை கட்டினால் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் எந்த காரணமும் இல்லாமல் மேகதாது திட்டத்தை தமிழகம் எதிர்க்கிறது. நாங்கள் மேகதாது திட்டத்திற்கு திட்ட அறிக்கை தயாரித்து அனுமதிக்காக மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். அதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி நீர் தொடர்பான தமிழக அரசின் மனு விசாரணைக்கு வருகிறது. அப்போது கர்நாடகம் தரப்பில் ஆஜராகும் வக்கீல்கள் திறமையான வாதத்தை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளோம். மேலும் காவிரி பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்துக்கட்சி குழுவை டெல்லி அழைத்து செல்வது குறித்தும் ஆலோசித்தோம். அதுகுறித்து வரும் நாட்களில் முடிவு செய்து டெல்லிக்கு செல்வோம். அப்போது மேகதாது திட்டத்துக்கு அனுமதி கொடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்துவோம்" இவ்வாறு சித்தராமையா கூறினார்.












Click it and Unblock the Notifications