போர்க்களமான கர்நாடகா சட்டசபை தேர்தல்: அண்ணாமலைக்கு தடை விதிக்க கோரும் காங்கிரஸ்!
பெங்களூர்: கர்நாடகாவில் தமிழ்நாடு பாஜக தலைவரும் அம்மாநில முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது காங்கிரஸ்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஆளும் பாஜக ஆட்சியை இழந்துவிடும் என்கின்றன கருத்து கணிப்புகள். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும் என்பதும் கருத்து கணிப்பு முடிவுகள். இந்த இரு பெரும் கட்சிகளிடையே ஜேடிஎஸ், இருப்பை தக்க வைக்க பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.

கர்நாடகா தேர்தல் களத்தில் பாஜக பல்வேறு மேலிடப் பொறுப்பாளர்களை அறிவித்தது. இதில், கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இடம்பெற்றார். ஆனால் அண்ணாமலையின் பெயர் தொடக்கம் முதலே பெரும் சர்ச்சையாகி வருகிறது.
பாஜகவின் வேட்பாளர்கள் தேர்வின் போது அண்ணாமலை பரிந்துரைத்த பெயர்களுக்கு பாஜகவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அண்ணாமலையில் பாஜகவில் அதிக அதிருப்தி வேட்பாளர்கள் போட்டியிடும் நிலைமை உருவாகிவிட்டதாக கூறப்பட்டது. இதனால் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார் அண்ணாமலை . இத்தனைக்கும் தமிழ்நாட்டில் பிரதமர் மோடி அப்போது பயணம் மேற்கொண்டிருந்தார். ஆனாலும் அண்ணாமலை, தமிழ்நாட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவ்வளவு பிரச்சனையை உருவாக்கி இருந்தார் பாஜகவுக்குள்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் அண்ணாமலை மீது காங்கிரஸ் பகீர் புகார் ஒன்றை கூறியது. அதாவது ஹெலிகாப்டரில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பெருமளவு பணத்தை எடுத்துச் சென்றார் அண்ணாமலை என்பது அந்த புகார். இந்த புகாரும் கர்நாடகா தேர்தல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்போது கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் நாகராஜ் கவுடா, தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் அண்ணாமலை. அவர் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸ் அதிகாரிகளை பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு நெருக்கடி தருகிறார். இதனால் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் பட்டுவாடா நடைபெறுகிறது. அண்ணாமலை முன்னாள் போலீஸ் அதிகாரி என்பதால் அவரது வாகனத்தை சோதனையிடுவதும் இல்லை. பல்வேறு காங்கிரஸ் தலைவர்களுக்கு வருமான வரித்துறை ரெய்டு வரும் என மிரட்டல் விடுக்கிறார் அண்ணாமலை. ஆகையால் அண்ணாமலை, கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் செய்யவும் கர்நாடகாவில் தங்கவும் தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications