"அது தியாகத்தின் சின்னம்.. மூவர்ணக் கொடிக்கு பதிலாக காவிக்கொடி வரும்!" கர்நாடக பாஜக தலைவர் சர்ச்சை
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான கேஎஸ் ஈஸ்வரப்பா மூவர்ணக் கொடி குறித்துக் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இப்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில காலமாகவே அங்குத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் விஸ்வரூபம் எடுத்த ஹிஜாப் ஓய்ந்த சில வாரங்களில் ஹலால் கறி விவகாரம் பிரச்சினை ஆனது. அதேபோல இந்து கோயிலுக்கு முன்பு இருந்த இஸ்லாமியர்களின் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

தேசியக் கொடி
இப்படி அடுத்தடுத்து அங்கு நடைபெறும் சம்பவங்கள் கர்நாடக மாநிலத்தில் ஒருவித பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது. இந்தச் சூழலில் கர்நாடக முன்னாள் அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான கேஎஸ் ஈஸ்வரப்பா கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதாவது வரும் காலத்தில் நமது நாட்டின் தேசியக் கொடியாக 'பகவா' அல்லது காவிக் கொடியாக மாறலாம் எனக் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி காவிக் கொடி தியாகத்தின் சின்னம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவிக் கொடி
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்த நாட்டில் காவிக்கொடி நீண்ட காலமாக மதிக்கப்படுகிறது. காவிக் கொடிக்கு பல்லாயிரம் ஆண்டுக்கால வரலாறு உண்டு. காவிக்கொடி தியாகத்தின் சின்னம். அந்த மதிப்பை நமக்குள் விதைக்கவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் காவிக்கொடி முன் பிரார்த்தனை செய்வோம்.. காவிக்கொடி இன்று அல்லது என்றாவது இந்நாட்டின் தேசியக் கொடியாக நிச்சயம் மாறும். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

மூவர்ணக் கொடி
அவர்கள் (காங்கிரஸ் கட்சியினர்) கூறும்போதெல்லாம் அங்கே நாங்கள் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை. நமது அரசியலமைப்பின் படி மூவர்ணக் கொடி தேசியக் கொடியாகும். அதற்குத் தகுதியான மரியாதையை நாங்கள் வழங்குகிறோம்," என்று அவர் கூறினார். அதேநேரம் கேஎஸ் ஈஸ்வரப்பா தேசியக் கொடி குறித்து இப்படி சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவது இது முதல்முறை இல்லை.

முதல் முறை இல்லை
ஏற்கனவே, கடந்த பிப். 9ஆம் தேதி அவர் இதே போன்ற கருத்துகளை தெரிவித்து இருந்தார். அதாவது விரைவில் அனைத்து இடங்களிலும் காவிக்கொடி ஏற்றுவோம் என்றும் இன்றோ நாளையோ இந்தியா இந்து நாடாக மாறும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியும் கூட போராட்டம் நடத்தி இருந்தது.

யார் இவர்
இந்த கே.எஸ். ஈஸ்வரப்பா வேறு யாரும் இல்லை. கடந்த மாதம் கர்நாடகாவில் பாஜக நிர்வாகியும் ஒப்பந்ததாரருமான சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்டிருந்தார். அதற்கு முன்பு, அவர் எழுதி இருந்த கடிதத்தில் அப்போது அமைச்சராக இருந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா தன்னிடம் 40 சதவீத கமிஷன் கேட்டு மிரட்டுவதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications