பெண் கொடுத்த மனு.. கண்டபடி திட்டி சுக்கு நூறாக கிழித்து எறிந்த கர்நாடக பாஜக எம்எல்ஏ.. சர்ச்சை
பெங்களூரு: தன்னிடம் கேள்வி கேட்ட பெண்ணை கண்டபடி திட்டியதுடன், போலீஸாரிடம் அவரை கைது செய்யக் கூறிய கர்நாடகா பாஜக எம்எல்ஏவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெறுவதற்காக மக்களிடம் பவ்யமாக நடந்து கொள்வதும், தேர்தல் முடிந்து அதிகாரத்துக்கு வந்த பின்னர் அதே மக்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்வதும் இந்தியாவில் தொடர் கதையாகவே உள்ளது. மாநிலம், கட்சி என எந்த பேதமும் இல்லாமல் இதுபோன்ற செயல்களில் அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருவதை நம்மால் பார்க்க முடிகறது.
சாலையை சீரமைக்குமாறு கோரிக்கை விடுத்த இளைஞரை எம்எல்ஏ தாக்குவது; தன் முன்னால் அமர்ந்து பேசியவரை அமைச்சர் அறைவது போன்ற செய்திகளை நாம் அன்றாடம் கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.
இந்நிலையில், கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ ஒருவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கிறார். பெங்களூரின் மகாதேவபுரா தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் அரவிந்த் லிம்பாவலி. தற்போது தொடர் கனமழையால் மகாதேவபுரா பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனை பார்வையிடுவதற்காக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி இன்று அங்கு வந்துள்ளார். அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர் சிறிது நேரத்திலேயே அங்கிருந்து புறப்பட்டார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அரவிந்த் லிம்பாவலியிடம் பேசினார். அப்போது எந்த ஆதாரமும் இல்லாமல் மாநகராட்சி தன் மீது நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டை வைப்பதாக அவர் கூறினார். அந்தப் பெண் தன்னிடம் பேசுவதை காதுகொடுத்தும் கேட்காத எம்எல்ஏ விறுவிறுவென நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பெண், ஐயா என் கோரிக்கையை சிறிது கேளுங்கள் எனக் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி அந்தப் பெண்ணை கண்டபடி திட்டியுள்ளார். மேலும், அவரிடம் இருந்த மனுவையும் வாங்கி கிழித்தெறிந்தார். அத்துடன் நிற்காமல், அங்கிருந்த போலீஸாரிடம் அந்தப் பெண்ணை கைது செய்யுமாறும் கூறினார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த போலீஸார் அப்பெண்ணை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விமர்சனத்துக்கு வித்திட்டது. சொந்த தொகுதி பெண் ஒருவரின் கோரிக்கையை கூட கேட்காமல், அவரை கைது செய்யக் கூறிய எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலியை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ஒரு சர்ச்சையில் சிக்கினார். அவரது மகள் பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறி கார் ஓட்டியதற்காக போலீஸார் அபராதம் விதித்தனர். அப்போது அவர், "என் தந்தை ஒரு எம்எல்ஏ. எம்எல்வின் காரையே நிறுத்துவீர்களா" என போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவவே மகள் செய்த தவறுக்காக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.