மேகதாது அணை.. ஒரு முடிவோடு இருக்கும் கர்நாடக அரசு.. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் பொம்மை
பெங்களூர்: மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
2022-2023 ஆம் ஆண்டிற்கான கர்நாடக மாநில நிதிநிலை அறிக்கை நேற்று கர்நாடக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதிநிலை அறிக்கையில், மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதியை பெற்று மேகதாது அணை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேகதாது அணை மற்றும் பெங்களூரு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடக அரசு ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கர்நாடக அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டவும் தமிழக கட்சிகள் முதல்வரை வலியுறுத்தி வருகின்றன.

கர்நாடகா
மேகதாது அணை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ''அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க கர்நாடக மாநில அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளோம். டெல்லி சென்று மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் தருமாறு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து வலியுறுத்தப் போகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

காவிரி
காவிரி நதிநீர்ப் பங்கீடு என்பது தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒன்று. இதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், நான்கு மாநிலங்களின் குடிநீர்த் தேவை, பாசனத் தேவை ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்குமான நீரின் அளவை நிர்ணயித்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி 192 டிஎம்சி அளவு நீரை கர்நாடகம், தமிழகத்துக்குத் தரவேண்டும்.

மேகதாது அணை
தமிழகத்திற்கு தரவேண்டிய நீர்ப் பங்கீட்டின் அளவை 177.25 டிஎம்சி அடியாக குறைத்தது கர்நாடக அரசு. இவ்வாறு குறைக்கப்பட்டதற்கு பெங்களூர் குடிநீர்த் தேவையும் ஒரு காரணம் என கர்நாடகா தெரிவித்தது. மீண்டும் அதே காரணத்தைக் காட்டி, மேகதாது அணை கட்டுவதற்காக தற்போது கர்நாடக அரசு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications