நான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா!
பெங்களூர்: முதல்வர் என்று குறிப்பிட்டு, ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் ஒருவர் பதவிப்பிரமாணம் செய்ததால் முதல்வர் எடியூரப்பா திடுக்கிட்ட சுவாரசிய சம்பவம் கர்நாடகாவில் இன்று நடைபெற்றது.
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்து சுமார் 20 நாட்களுக்கு பிறகு இன்று முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு செய்யப்பட்டது.
மொத்தம் 17 அமைச்சர்கள் இன்று ராஜ் பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
பூங்கொத்து
இந்த நிகழ்வில், மேடையில் ஆளுநருடன், முதல்வர் எடியூரப்பாவும் நின்றபடி பங்கேற்றார். ஒவ்வொரு அமைச்சர்களும், பதவியேற்று திரும்பியபோதும் ஆளுநரை போலவே எடியூரப்பாவும் அவர்களுக்கு பூங்கொத்துகளை கொடுத்து வாழ்த்தி அனுப்பினார்.
முதல்வராக
இந்த நிலையில் தான், ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது. சீனியர் எம்எல்ஏ, மாதுசாமி அமைச்சராக பதவி ஏற்றபோது, "எனது அமைச்சர் பதவியை பாரபட்சமின்றி திறமையாக பணியாற்றுவேன்" என்று சொல்வதற்கு பதிலாக, முதல்வராக என்று தெரிவித்தார்.
எடியூரப்பா சமாளிப்பு
இதையடுத்து தனது தவறை உணர்ந்து கொண்ட அவர், சிரித்தபடி.. "மன்னிக்கவும், அமைச்சராக" என்று தெரிவித்தார். இதையடுத்து கூட்டத்தில் பெரும் கோஷம் எழுந்தது. சிரிப்பலை எழுந்தது. ஒரு நிமிடம் திடுக்கிட்ட எடியூரப்பா, பிறகு நிலைமை தெரிந்து கொண்டு லேசாக புன்முறுவல் பூத்து சமாளித்தார்.
டோஸ் கேரண்டி
ஆனால், கண்டிப்பாக முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே மாதுசாமிக்கு எடியூரப்பா டோஸ் கொடுக்கப் போவது என்னவோ நிச்சயம் தான் என்கிறார்கள் பாஜகவினர். பின்ன இருக்காதா.. எப்படியோ பாடுபட்டு மீண்டும் முதல்வர் இருக்கையில் எடியூரப்பா அமர்ந்திருக்கும் நிலையில், அமைச்சர் பதவி கிடைத்த ஒருவர், நேரடியாக முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது போல பதவி பிரமாணம் செய்தால், கோபம் இருக்கத்தானே செய்யும்!