"ஆர்எஸ்எஸ் அடிமை நீங்கள்".. கர்நாடகா முதல்வரை விட்டு விளாசிய காங்கிரஸ்.. தீவிரமடையும் மோதல்!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மையை 'ஆர்எஸ்எஸ் அடிமை' என காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாட்டின் 76-வது சுதந்திர தினத்தையொட்டி கர்நாடகா அரசு சார்பில் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் மகாத்மா காந்தி, நேஜாதி சுபாஷ் சந்திரபோஸ், வல்லபபாய் படேல், பகத் சிங், அம்பேத்கர், சாவர்க்கர் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை.
இது கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு சென்றதில் இருந்து அடிமைத்தனம் அகன்றுவிட்டதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது தவறு என கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அனைவரும் நிரூபித்திருக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலில் ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்தை வைக்காததன் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மிகச்சிறந்த அடிமை என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த செயலின் மூலம் தனது பதவியை காப்பாற்ற எந்த நிலைக்கும் பசவராஜ் பொம்மை இறங்குவார் என்பது தெரிந்துவிட்டது. சுதந்திரத்துக்காக போராடி 9 ஆண்டுகள் சிறையில் இருந்தது மட்டுமல்லாமல் சுதந்திர வேள்வியில் மக்களை பங்கேற்க செய்ய சிறையில் இருந்தே பல புத்தகங்களை எழுதியவர் ஜவஹர்லால் நேரு என்பதை பசவராஜ் பொம்மை மறந்துவிடக் கூடாது.
சாவர்க்கர்
ஒருவேளை, சாவர்க்கரை போல பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கடிதங்களையும், கருணை மனுக்களையும் ஜவஹர்லால் நேரு அளிக்காததால் ஆர்எஸ்எஸ் சோகம் அடைந்துள்ளதாக நினைக்கிறேன். மகாத்மா காந்தியை கொன்றதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ததற்காக அவர்கள் நேருவை வெறுக்கிறார்கள். பிரிட்டிஷாரிடம் கெஞ்சிய சாவர்க்கரை விளம்பரத்தில் முதல் வரிசையிலும், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் சுதந்திரத்துக்காக பாடுபட்டவரான அம்பேத்கரை கடைசி வரிசையிலும் கர்நாடகா அரசு இடம்பெறச் செய்திருக்கிறது. இதிலிருந்தே கர்நாடகா பாஜக எந்த அளவுக்கு தீண்டாமையை கடைப்பிடிக்கிறது என்பது தெரிகிறது.
Recommended Video
நேருவை புறக்கணித்தன் மூலம் ஒட்டுமொத்த உலக நாடுகள் முன்னிலையில் இந்தியாவை பசவராஜ் பொம்மை அவமானப்படுத்தி விட்டார். இதற்காக இந்தியர்களிடம் பசவராஜ் பொம்மை மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.