கர்நாடக அரசியலில் அடுத்த குண்டு.. அரசுக்கு எதிராக காங். மூத்த தலைவர் ராமலிங்க ரெட்டி போர்க்குரல்
பெங்களூர்: கர்நாடக கூட்டணி அரசில், காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு உரிய மதிப்பு கிடைப்பதில்லை, என்று அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராமலிங்க ரெட்டி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆனால் சமீபத்தில் நடைபெற்ற, லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், தலா ஒரு தொகுதியில் மட்டுமே இந்த கட்சிகள் வெற்றி பெற்றன. 25 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், மண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சுமலதா, பாஜக ஆதரவோடு வெற்றி பெற்றார்.
கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்.. மஜத தலைவர் விஸ்வநாத் ராஜினாமா.. காங். மீது பரபர குற்றச்சாட்டு
ராமலிங்க ரெட்டி ட்வீட்ஸ்
இந்த நிலையில்தான் கூட்டணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் தேர்தலின் போது சரியாக ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ள மதசார்பற்ற ஜனதா தள கட்சியின், கர்நாடக மாநில தலைவர் விஸ்வநாத் இன்று தனது தலைவர் பதவிக்கான, ராஜினாமாவை அறிவித்தார். இது ஒருபக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராமலிங்க ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டுகளை வரிசையாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
சீனியர்கள் புறக்கணிப்பு
அவர் கூறுகையில், கர்நாடகா அரசில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், புறக்கணிக்கப்பட்டுள்ளனர். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி தோல்வி அடைவதற்கு இது ஒரு முக்கிய காரணம். அமைச்சர்களின் தவறான செயல்பாடுகளும் இந்த தோல்விக்கு ஒரு முக்கிய காரணம்.
காங்கிரஸ் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து கொஞ்சமும் அடிப்படை அறிவு இல்லாத புதிதாக வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தான் கட்சியின் இந்த நிலைக்கு காரணம். மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசுதான் ஆட்சி செய்தாலும் கூட, தேர்தலின் போது கட்சி நிர்வாகிகள் உற்சாகத்தோடு பணியாற்றவில்லை. இதற்கு காரணம், சில அமைச்சர்கள் மற்றும் நமது நிர்வாகிகள் நடுவே போதிய உறவு இல்லாததுதான்.
பெங்களூரில் பலம்
தொண்டர்கள் பகிரங்கமாக இது தொடர்பாக கட்சி மேலிடத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். கட்சியிலும் ஆட்சியிலும் சீனியர்களை புறக்கணித்தால் இப்படித்தான் நடக்கு.ம் இவ்வாறு ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். ராமலிங்க ரெட்டியை பொறுத்தளவில் பெங்களூர் காங்கிரஸில் முக்கியமான ஒரு தலைவர்.
உயர் பொறுப்புகள்
பெங்களூர் பிடிஎம் லேஅவுட், சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளவர். சித்தராமையா தலைமையிலான, கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில், உள்துறை அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர் என பல முக்கிய துறைகளை நிர்வகித்தவர். ஆனால் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
மக்கள் செல்வாக்கு
கடந்த ஆண்டு நடைபெற்ற பெங்களூர், ஜெயநகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், ராமலிங்க ரெட்டி மகள் சௌமியா முதல் முறையாக போட்டியிட்டு, வெற்றி பெற்றார். பெங்களூரில் தனது மக்கள் செல்வாக்கை இவ்வாறு தொடர்ந்து அவர் நிரூபித்து வந்தாலும் கூட அமைச்சர் பதவி வழங்காமல் குமாரசாமி அரசு புறக்கணித்து வருகிறது. இந்த நிலையில்தான் பகிரங்கமாக அதிருப்தி வெளிப்படுத்தி ராமலிங்க ரெட்டி, ட்வீட் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.