குஜராத்திலிருந்து கர்நாடகத்திற்குப் பரவிய கொரோனா.. இனிதான் ரொம்ப கவனம் தேவை.. சிந்தனையில் அதிகாரிகள்
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று 63 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது பாதிக்கப்பட்டதில் 32 பேர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருடன், பயண தொடர்பு கொண்டவர்கள் என்பதுதான்.
கர்நாடகாவில் கடந்த பல நாட்களாகவே, கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த சில நாட்களாக மட்டும் பாதிப்பு என்பது அதிகரித்துள்ளது. இதற்கு ஊரடங்கு தளர்வு ஒரு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
சமூக பரவல் தொடங்கிவிட்டதா? தமிழகத்தில் 3 மாவட்டங்கள் உள்பட 69 மாவட்டங்களில் ஐசிஎம்ஆர் ஆய்வு
குணமடையும் விகிதம்
சிகிச்சை பெறுவதை விடவும், குணமடைவோர் எண்ணிக்கை சுமார் ஒரு வாரமாக கர்நாடகாவில் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது குணமடைந்தவர்கள் விட சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மேலும் 11 நோயாளிகள் ஐசியு வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
கர்நாடக நிலவரம்
அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 925 என்ற அளவில் உள்ளது. இதில் 32 பேர் குஜராத்துடன் தொடர்பு உடையவர்கள். அனைவருமே பாகல்கோட் என்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அங்கே உள்ள சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர்.
பெங்களூர் எப்படி
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், பெங்களூர் நகர்ப்பகுதியில் இன்று நான்கு பேருக்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது. குஜராத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இது போன்ற வைரஸ் பரவியுள்ளது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அந்த மாநிலத்தில் சீனாவில் பரவிய எல் வகை வைரஸ் பரவி இருப்பதாக ஒரு தகவல் உள்ளது. இது மிக வேகமாகப் பரவக் கூடியது மற்றும் அதிகம் பேரை கொல்லக்கூடியது என்று கூறப்படுகிறது.
அதிக எச்சரிக்கை
குஜராத்தில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அது போன்ற வைரஸ் பரவி விட்டால் மிகவும் ஆபத்தாகி விடுமோ என்ற அச்சம், கர்நாடக அதிகாரிகள் மத்தியில் இருக்கிறது. எனவே, இந்த நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்துள்ளனர்.