வீட்டு வேலை செய்வோருக்கு ஜாக்பாட்! கர்நாடகா அரசு கொண்டு வரும் அசத்தலான மசோதா! இனி ஏமாற்ற முடியாது
பெங்களூர்: பெங்களூர் உள்பட கர்நாடகா முழுவதும் வீட்டு வேலை செய்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய மசோதாவை மாநில அரசு கொண்டு வர உள்ளது. இதன்மூலம் நகரங்களில் வீடுகளில் பணியாற்றும் பணியாளர்களை பிரத்யேக தளத்தில் பதிவு செய்து குறைந்தபட்ச ஊதியம் வழங்கவும், அவர்களின் நலத்திட்டங்களுக்கான 5 சதவீதம் வரை கட்டணமாக செலுத்துவது கட்டாயமாக்கப்படுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக சித்தராமையாக உள்ளார். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக சந்தோஷ் லாட் உள்ளார். இந்நிலையில் தான் கர்நாடகாவில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய மசோதா கொண்டு வரப்பட உள்ளது.
இந்த மசோதா என்பது வீட்டு வேலை செய்வோரின் சமூக பாதுகாப்பு நலச்சட்டத்தை கொண்டதாக இருக்கும். மசோதாவிற்கு Domestic Workers (Social Security and Welfare) Bill என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின்படி வீட்டில் பணி செய்யும் பணிப்பெண்கள், சமையல்காரர்கள், டிரைவர்கள், குழந்தைகளின் பராமரிப்பாளர்கள் பயன்பெற உள்ளனர். அதாவது இந்த பணிகளுக்கு தனியே ஆட்களை பணியமர்த்தும்போது நபர்கள் அல்லது நிறுவனங்கள் கட்டாயமாக அரசு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதேோபல் பணியாளர்களின் ஊதியத்தில் 5 சதவீதம் வரை பணியாளர்களின் நலநிதியாக செலுத்த வேண்டும் என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, நிறுவனங்கள், ஊழியர்கள் என 3 தரப்பும் நிதி பங்களிப்பு செய்வது பற்றியும் இந்த மசோதாவில் சிறப்பு அம்சம் இடம்பெறலாம்.
அதுமட்டுமின்றி இந்த தொழிலாளர்கள் சார்ந்த பிரச்சனை, புகார்களை தீர்க்கும் வகையில் கர்நாடக மாநில வீட்டுப் பணியாளர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியம் அமைக்கப்பட உள்ளது. இதில் அரசு அதிகாரிகள், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் சங்கங்கள், நிறுவனங்கள், சேவை வழங்குநர்கள் (டிஜிட்டல் தளங்கள் உட்பட), குடியிருப்பு நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பார்கள்.
இந்த நல நிதி, ஒவ்வொரு காலாண்டுக்கும் அல்லது ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறை, நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தில் ஆண்டுதோறும் டிஜிட்டல் போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பதிவேற்றப்பட்ட ஆண்டு அறிக்கைகள் செலுத்தப்பட்ட உண்மையான நல நிதியுடன் பொருந்த வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் அபராதம் செலுத்த வேண்டும்.
கர்நாடகாவில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம் வழங்கப்படுவது இல்லை. சம்பந்தப்பட்ட உரிமையாளர்களால் துன்புறுத்தப்படுகின்றனர். வயது முதிர்வின்போது வீட்டு வேலை செய்வோர் அதிக சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களை நலனை கருத்தில் கொண்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா விரைவில் கர்நாடகா சட்டசபை, மேல்சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அதன்பிறகு சட்டமாக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications