300 கி.மீ சைக்கிளில் சென்று.. மகனுக்கு மருந்து வாங்கிய தந்தை.. பெங்களூரில் நெகிழ்ச்சி சம்பவம்..!
மகனுக்காக 300 கிமீ சைக்கிளில் சென்று மருந்து வாங்கி வந்துள்ளார் தந்தை
பெங்களூரு: எங்கு திரும்பினாலும் கொரோனா பீதி.. மாநிலம் முழுவதும் லாக்டவுன்.. போக்குவரத்து வசதியும் இல்லை.. இதனால், 300 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று, தன்னுடைய மகனுக்கு மருந்து வாங்கி வந்துள்ளார் ஒரு பாசமிகு அப்பா.. இந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
மைசூரு அருகே நரசிபூர் தாலுகா கனிகன கோப்பலு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்.. இவர் ஒரு கூலி தொழிலாளி.. ஆனால், தற்போது லாக்டவுன் போட்டுவிடவும் வேலை இன்றி, வருமானமும் இன்றி தவித்து வந்துள்ளார்.
இவருக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.. ஆனால், நரம்பு சம்பந்தமான நோயால் அவதிபட்டு வருகிறார். மைசூரில் ரொம்ப காலமாக சிகிச்சை எடுத்துள்ளனர்.. அங்கு சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
மாத்திரைகள்
2 மாசத்துக்கு ஒருமுறை அந்த ஆஸ்பத்திரிக்கு மகனை செக்கப்புக்காக அழைத்து வந்து டாக்டர்களிடம் காட்டிவிட்டு வரவேண்டும்.. அதேசமயம், ஒருநாள்கூட மாத்திரையை தவறவிடாமல் சாப்பிட வேண்டும், இப்படி18 வயது வரை மாத்திரை தர வேண்டும், ஒருவேளை மாத்திரை இல்லாவிட்டால் சிறுவனுக்கு கை - கால் வலிப்பு வந்துவிடக்கூடும் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர்.
ஆஸ்பத்திரி
இப்படிப்பட்ட சூழலில்தான், கர்நாடகாவில் தொற்று அதிகமாகி முழு லாக்டவுன் போடப்பட்டது.. இதன் காரணமாக, மகனை ஆஸ்பத்திரிக்கு செக்கப்புக்கு அழைத்து செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.. கடைகளும் இல்லை.. இதனால் மகனுக்கு மாத்திரைகள் காலியாகிவிடவும், என்ன செய்வதென்றே தெரியாமல் ஆனந்த் விழித்தார்..
மெடிக்கல் ஷாப்
சிகிச்சை தந்த மெடிக்கல் ஷாப் செல்ல, பெங்களூருக்குதான்போக வேண்டும்.. எனவே, சைக்கிளிலேயே பெங்களூர் செல்ல முடிவெடுத்து, கனகபுரா பாதை வழியாக பயணம் செய்தார்... மொத்தம் 2 நாட்கள் சைக்கிளிலேயே பயணம் செய்துள்ளார். மகனுக்காக சைக்கிளை மிதித்து கொண்டு வந்த ஆனந்தை கண்டதும், அந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆச்சரியப்பட்டார்கள்..
மாத்திரைகள்
உடனடியாக அந்த மருந்தை தந்ததுடன், ஆனந்தின் செலவுக்கு ஆயிரம் ரூபாய் பணமும் தந்து அனுப்பி வைத்தனர்.. இதையடுத்து 2 நாள் கழித்து கிராமம் வந்து சேர்ந்தார் ஆனந்த்.. அதாவது மொத்தம் 300 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்று வந்துள்ளார். இதுகுறித்து ஆனந்த் சொல்லும்போது, "ஒருநாள்கூட மாத்திரைகள் தவறகூடாது என்று டாக்டர்கள் சொன்னார்கள்.. அதனால்தான் பெங்களூர் வரை சென்றேன்.. கஷ்டப்பட்டாலும் என் மகனுக்கு மருந்து வாங்கிட்டேன்" என்று பூரித்து சொல்கிறார்.