தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து பாஜக போராட்டம்.. கர்நாடகாவில் நாளை அனைத்து கட்சி கூட்டம்
பெங்களூரு: தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து பாஜகவினர் மண்டியாவில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் பற்றி விவாதிக்க கர்நாடகா மாநில அரசு நாளை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறது.
கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்வதில் வறட்சி காலங்களில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. ஜூன் மாதமும் ஆகஸ்ட் மாதமும் மழை சரியாக பெய்யவில்லை. ஜூலையில் மட்டுமே ஓரளவு மழை பெய்துள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட்டு மாதம் தமிழகத்திற்கு 52 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் நீர் குறைவான அளவே இருப்பதால் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
தற்போது உள்ள 54 டிஎம்சி நீரை வைத்து பெங்களூரு, மண்டியா, மைசூரு, ராமநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே முடியாது இந்த சூழலில் தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்ததை தொடர்ந்து கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டது.
ஆனால் இந்த நீர் போதாது எனவும், கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 52 டி.எம்.சி. நீரை திறக்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த 14-ந் தேதி வழக்கு தாக்கல் செய்தது.
இதைத்தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து கடந்த 6 நாட்களாக வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடிக் கும் மேல் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கு கர்நாடக அரசியல் கட்சியினர், விவசாய மற்றும் கன்னட அமைப்பினா் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தண்ணீர் திறந்துவிடும் கர்நாடாக மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து, எதிர்க்கட்சியான பாஜக மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மண்டியா மாவட்டத்தில் நேற்று போராட்த்தில் ஈடுபட்டன. காங்கிரஸ் அரசை அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். பெங்களூரு மைசூரு தேசிய நெடுஞ்சாலையிலும் மறியல் போராட்டம் நடத்தினர்.

கர்நாடகாவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, காவிரி விவகாரம் குறித்து விவாதித்து முடிவெடுக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் எப்படி அணுகுவது, மத்திய அரசிடம் கூட்டாக சென்று கோரிக்கை வைப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications