இடியை இறக்கிய கர்நாடகா.. மேகதாது திட்டத்தை அமல்படுத்த 30 பேர் கொண்ட குழு.. அரசு மும்முரம்
பெங்களூர்: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு - கர்நாடகா மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. நீதிமன்றங்கள் வழக்கு தொடர்ந்தும், ஆணையங்கள் அமைக்கப்பட்டும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, மேகதாது திட்டத்தை அமல்படுத்த 30 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு - கர்நாடகா இடையே கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக காவிரி நதி நீர் பங்கீட்டில் பஞ்சாயத்து நிலவி வருகிறது. கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்காக நீண்ட வருடங்களாக முயற்சித்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக புகார் உள்ளது.

இந்நிலையில், கர்நாடக விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா மாநிலம், ராம்நகர் மாவட்டத்தில் மேகதாதுவில் புதிய தடுப்பணை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பித்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, புதுச்சேரி உள்ளிட்டோரும் மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான தீவிர நடவடிக்கைகளை கர்நாடகா அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவிரியின் குறுக்கே அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறி தமிழக அரசு தொடர்ந்து போராடி வந்தாலும், அணை கட்டுவதில் கர்நாடக அரசு கடுமை காட்டி வருகிறது.
இதனிடையே, மேகதாதுவில் அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யுமாறு உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுத்ததோடு, தமிழக அரசின் கருத்தை கேட்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மேகதாது திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் வகையில், 30 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவை கர்நாடக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
மேகதாது அணை திட்டம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் இக்குழுவில், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னோட்ட பணிகளை இவர்கள் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications