16 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 23 வயது இளைஞர்! குற்றவாளிக்கு 15 நாட்கள் ஜாமீன்! பின்னணி என்ன?
பெங்களூர்: பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டி இளைஞருக்கு 15 நாட்கள் ஜாமீன் வழங்கி கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர் 23 வயது இளைஞர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். அப்போது அந்த சிறுமிக்கு 16 வயது முடிந்து 9 மாதங்கள் ஆகியிருந்தன. இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது அவருடைய தாய்க்கு தெரியவந்தது.
உடனே சிறுமியிடம் அவரது தாய் விசாரித்தார். அப்போது சிறுமி, நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து அவர் மைசூர் மகளிர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்தனர்.
இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் மீதான போக்சோ வழக்கு மைசூரு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே அந்த சிறுமிக்கு குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அந்த இளைஞர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் தான் பாலியல் பலாத்காரம் செய்த சிறுமியை திருமணம் செய்ய இருப்பதாகவும் தனக்கு 15 நாட்கள் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அந்த மனு நீதிபதி நாகபிரசன்னா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பினரிடம் விசாரணை நடத்திய நீதிபதி தனது தீர்ப்பை அளித்தார்.
அவர் கூறுகையில் சிறுமியை பலாத்காரம் செய்தது தண்டனைக்குரிய குற்றம், மாபெரும் வெறிச்செயல். ஆனால் குழந்தையின் நலனையும் அதன் தாயையும் பாதுகாக்க வேண்டிய சூழல் உள்ளது. குழந்தையை பெற்ற அந்த பெண்ணுக்கு தற்போது 18 வயது நிறைவடைந்துவிட்டது.
இதனால் அவருக்கு திருமணம் என்பது அவருடைய சூழலுக்கு முக்கியமானது. அதுதான் அவருக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு! அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நபருக்கு திருமணம் செய்து கொடுக்க இரு வீட்டாரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால் அந்த இளைஞருக்கு 15 நாட்கள், ஜூலை மாதம் 3ஆம் தேதி வரை ஜாமீன் வழங்குகிறேன்.
ஜூலை 4ஆம் தேதி அந்த இளைஞர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். அப்போது திருமணப் பதிவு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications