இனி 18 + கிடையாதா? பாலியல் உறவுக்கான வயது வரம்பை 16-ஆக குறைக்க.. கர்நாடகா உயர் நீதிமன்றம் பரிந்துரை
பெங்களூர்: ஒருமித்த பாலியல் உறவுக்கான வயது வரம்பை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க கர்நாடகா உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
சிறு வயதிலேயே பாலியல் உறவில் ஈடுபடுவதால் குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் சிறார்களை கருத்தில்கொண்டு, இந்த வயது வரம்பு குறைப்பை பரிசீலிக்குமாறும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சமீபகாலமாக நீதிமன்றங்களின் தீர்ப்புகள் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் இந்தக் கருத்து குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனை ப்யூன் அட்டகாசம்.. 16 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை
விவாதத்திற்கு வித்திடும் தீர்ப்புகள்..
சில நேரங்களில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளும், கூறும் கருத்துகளும் பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்யும். உதாரணமாக, தன் பாலின திருமணங்கள் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அப்போது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. சமீபத்தில் கூட, உணவு சமைக்காததற்காக மனைவியை கொலை செய்த கணவனை விடுதலை செய்து கர்நாடகா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் விவாதப்பொருளாக மாறியது. அந்த வகையில், கர்நாடகா உயர் நீதிமன்றம் தற்போது ஒரு கருத்தை கூறியுள்ளது.
சட்டம் தெரியாத சிறார்கள்..
ஒரு மைனர் சிறுமியை மைனர் சிறுவன் பலாத்காரம் செய்தது தொடர்பான ஒரு வழக்கு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கானது, நீதிபதிகள் சுராஜ் கோவிந்தராஜ், பசவராஜ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சில கருத்துகளை தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது: 18 வயதுக்கு குறைவான சிறுவர், சிறுமியர் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றங்கள் தற்போது அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன. இதில் பல குற்றங்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றன. இதில் கொடுமை என்னவென்றால், இரு பாலரின் ஒருமித்த அனுமதியுடனே இந்த உடலுறவு நிகழ்கின்றன. ஆனால் இதுபோன்ற தவறு செய்த பெரும்பாலானோருக்கு தாங்கள் செய்தது சட்டப்படி குற்றம் என்பது தெரிவதில்லை.
எதிர்காலத்தை பாதிக்கும்..
சட்டம் குறித்த அறியாமை, குற்றம் செய்வதற்கு ஒரு சாக்குப்போக்கு அல்ல என்பது உண்மைதான். ஆனால், இந்த வயதில் அவர்களுக்கு இச்சட்டங்களை புரிந்துகொள்ள முடியுமா என்கிற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. எனவே பள்ளிக்கு செல்லும் வயதிலேயே பல சிறார்கள் குற்ற வழக்குகளை சந்தித்து வருகிறார்கள். இது அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும். மேலும், 16 வயதுக்கு மேற்பட்ட சிறுமியின் ஒப்புதலுடன் நடக்கும் பாலியல் உறவுகளும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
18-இல் இருந்து 16..
எனவே, ஒருமித்த பாலியல் உறவுக்கான வயதுவரம்பை 18-இல் இருந்து '16 வயதுக்கு மேலே' என நிர்ணயம் செய்வது குறித்து இந்திய சட்ட ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல, போக்சோ சட்டத்தின் கீழ் எவை எவை குற்றம் என்பது குறித்து பள்ளிகளில் 9-ம் வகுப்பில் இருந்தே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு நடைமுறையை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க ஒரு கமிட்டியை கர்நாடகா கல்வித்துறை உருவாக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.