"பெங்களூரில் இதெல்லாம் சாதாரணம் தான்.." பாலியல் அத்துமீறல் சம்பவம்.. கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் கடந்த வாரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே பெங்களூர் போன்ற நகரில் இதுபோல நடப்பது சாதாரணம் தான் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகவே இருக்கிறது. இதனால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே அப்படியொரு சம்பவம் தான் கடந்த வாரம் பெங்களூரில் நடந்தது.

பாலியல் அத்துமீறல்
கர்நாடக தலைநகர் பெங்களூரில் இரவு நடந்து சென்ற பெண்ணிடம் இளைஞர் ஒருவர் அத்துமீறி இருக்கிறார். பெங்களூரின் சுட்டகுண்டேபல்யாவில் உள்ள பாரதி லேஅவுட்டில் உள்ள ஒரு தெருவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி அதிகாலையில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது..
அங்கு குறுகிய தெருவில் இரு பெண்கள் நடந்து சென்று கொண்டு இருந்த நிலையில், அவர்களை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வருகிறார். திடீரென அந்த பெண்களில் ஒருவரைச் சுவரில் தள்ளி பாலியல் ரீதியாக அத்துமீறுகிறார். பிறகு அங்கிருந்து ஓடிச் செல்கிறார். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இரண்டு பெண்களும், அந்தப் பகுதியை விட்டு வேக வேகமாக நடந்து செல்கிறார்கள்.
வழக்குப்பதிவு
இவை அனைத்தும் அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. இருப்பினும் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், பெங்களூர் போலீசார் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். 354B பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பரமேஸ்வரா
இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா இது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது பெங்களூர் போன்ற பெரிய நகரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சாதாரணம் தான் என்பது போல அவர் சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், இரவு நேரங்களில் ரோந்துப் பணியை அதிகரிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இதுபோல நடக்கத்தான் செய்யும்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "பெங்களூர் போன்ற ஒரு பெரிய நகரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. சட்டப்படி எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம் இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளேன்" என்றார். ஜி. பரமேஸ்வராவின் இந்தக் கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பரமேஸ்வராவின் பெண் வெறுப்பு, ஆணாதிக்க அருவருப்பான மனநிலையை இது காட்டுவதாகக் கர்நாடக பாஜக தலைவர்கள் சாடியுள்ளனர்.
பெங்களூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் இதேபோன்ற ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்தது காலையில் வாக்கிங் சென்ற பெண்ணிடம் ஒருவர் அத்துமீறினார். அது தொடர்பான வீடியோ பரவிய நிலையில், சம்பவம் நடந்த இரண்டு நாளில் டாக்ஸி டிரைவர் ஒருவர் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டார். அரசு டேட்டாவை வைத்துப் பார்க்கும் போது பெங்களூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த 2023ல் 1,135 பாலியல் வன்கொடுமை வழக்குகள் உட்பட 3,260 பெண்களுக்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications