ஓமிக்ரான் அச்சம்:புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை போட்ட கர்நாடகா.. என்ன கட்டுப்பாடுகள்? முழு தகவல்
பெங்களூரு: ஓமிக்ரான் அச்சம் காரணமாகக் கர்நாடகாவில் வரும் டிச. 30 முதல் ஜனவரி 2 வரை பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வேக்சின் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலகெங்கும் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து குறைந்தே வந்தது. இருப்பினும், கடந்த மாதம் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய கொரோனா நிலைமையை அப்படியே மாற்றிவிட்டது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வைரஸ் கேஸ்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் வைரஸ் கேஸ்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஓமிக்ரான்
ஓமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரசை உலக சுகாதார அமைப்பு, கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இது புதிய உருமாறிய வைரஸ் என்பதால் இது குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கொரோனா வேகமாகப் பரவும் ஆற்றல் கொண்டதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பல்வேறு நாடுகளுக்கும் பரவிய இந்த ஓமிக்ரான், இம்மாத தொடக்கத்தில் இந்தியாவுக்குள் புகுந்தது.
இந்தியாவில் ஓமிக்ரான்
இந்தியாவில் முதலில் பெங்களூருவில் முதலில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு கர்நாடக தலைநகர் பெங்களூருவில் முதலில் வைரஸ் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இந்த ஓமிக்ரான் வகை கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்த ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை 200க்கு மேல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.
கர்நாடகாவில் தடை
ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒமிக்ரான் காரணமாகப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கர்நாடகாவிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் அதிகரித்து வரும் ஓமிக்ரான் வழக்குகளைக் கருத்தில் கொண்டு, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை மாநிலத்தில் ஒரே இடத்தில் அதிகப்படியான மக்கள் கூட அனுமதி இல்லை.
கிளப்புகள்
இது தொடர்பாகக் கர்நாடக முதல்வர் பசவராஜ் கூறுகையில், "நாங்கள் புத்தாண்டு பொதுக் கொண்டாட்டத்திற்குத் தடை விதித்துள்ளோம். அதேநேரம் டிஜே போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லாமல் 50 சதவீத இருக்கைகளுடன் கிளப்புகள் மற்றும் உணவகங்களில் கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன ஓமிக்ரான் கேஸ்கள் தொடர்பாக துறைசார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அனுமதி இல்லை
திறந்த இடங்களில் மக்கள் கூடுவது தடை செய்யப்படுகிறது. டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை மாநிலம் முழுவதும் இந்தத் தடை அமலில் இருக்கும். கிளப்கள் மற்றும் உணவகங்களில் டிஜேக்களை கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை. அதேபோல் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் டிஜேக்களை கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை." என்றார். இது தொடர்பாக விரிவான கொரோனா கோவிட் கட்டுப்பாடுகள் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.