"பர்தா அணிவது ஒழுங்கீனமானது.. அதையெல்லாம் நியாயப்படுத்த முடியாது.." கர்நாடக பாஜக அமைச்சர் சர்ச்சை
பெங்களூரு: கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய உடுப்பி அரசு கல்லூரி அனுமதி மறுத்து வரும் நிலையில், இது தொடர்பாகக் கர்நாடக அமைச்சரின் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல கல்லூரிகளும் மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடை செய்து வருகின்றன.
பள்ளிகள் மூடப்பட்டால் என்ன.. மாணவர்களுக்கு 5 முட்டைகள், உலர் உணவு பொருட்கள் வழங்கப்படும்: தமிழக அரசு
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் மங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ , மாணவியர் சிலர் காவி உடை அணிந்து போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்புகள் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக இஸ்லாமிய மாணவிகளுக்கும் அரசு கல்லூரி நிர்வாகத்திற்கும் இடையே 3 வாரங்களுக்கு மேலாக மோதல் நீட்டித்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை அந்த இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு முன்பு போராட்டம் நடத்தினர்,
ஆண் பேராசிரியர்கள்
இது தொடர்பாக அந்த மாணவிகள் கூறுகையில், "முன்பு இங்குப் படித்தவர்கள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட்டனர். இப்போது மட்டும் ஏன் இந்த புதிய கட்டுப்பாடு எனத் தெரியவில்லை. இது எங்கள் அடிப்படை உரிமையை மீறுவதாகவும். ஆண் பேராசிரியர்கள் முன்னிலையில் ஹிஜாப் இல்லாமல் அமர்வது சங்கடமாக உள்ளது" என்கிறார்கள். மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் உடை வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் இல்லையென்றால் வீடுகளிலேயே இருந்து கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்த மறுநாளே மாணவிகள் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒழுங்கீனமான நடவடிக்கை
முன்னதாக இது குறித்து கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ் கூறுகையில், "இது ஒழுங்கீனமான நடவடிக்கை. பள்ளிகளும் கல்லூரிகளும் மத தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்கான இடம் இல்லை. அடுத்த ஆண்டு கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிலர் அதை அரசியலாக்க முயல்கின்றனர். இந்தச் சட்டம் 1958 முதலே கர்நாடகாவில் நடைமுறையில் உள்ளது. இதை எதோ நாங்கள் கொண்டு வந்ததைப் போல கூறுவது தவறு.
தேவையில்லாத அரசியல்
அந்த குறிப்பிட்ட அரசு கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவிகள் படித்து வருகின்றனர். மற்ற அனைவரும் உடை கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுகின்றனர். ஆனால் குறிப்பிட்ட சில மாணவிகள் மட்டும் ஆடைக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற விரும்பவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரை அனைத்து மாணவிகளும் உடை கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றி வந்தனர். ஆனால், இப்போது பாஜக ஆட்சியில் மட்டும் போராட்டம் நடத்துவது ஏன்? இதுபோன்ற ஒழுங்கீனமான நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது" என்றார்.
மாணவி விளக்கம்
இது குறித்துப் போராடும் மாணவிகளில் ஒருவர் கூறுகையில், "எங்கள் பெற்றோர்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் கல்லூரி நிர்வாகம் இதை ஏற்க மறுக்கிறது. இது பெண்கள் கல்லூரி, ஆனால் எங்களுக்கு ஆண் பேராசிரியர்கள் தான் வருகிறார்கள். இதனால் எங்களால் சவுகரியமாக உணர முடியவில்லை. எங்கள் கல்லூரியில் பெண் பேராசிரியர்கள் மட்டும் இருந்தால் ஹிஜாப் அணியாமல் இருப்பதில் எங்களுக்குப் பிரச்சினை இல்லை" என்றார்.
மன ரீதியிலான சித்தரவதை
அதேபோல முந்தைய ஆண்டுகளில் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட்ட போது எங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய மற்றொரு மாணவி, மாநிலத்தில் உடைகளுக்கு எனத் தனிக் கட்டுப்பாடுகள் இல்லை என்றும் கல்லூரி நிர்வாகம் தங்களை மன ரீதியாகச் சித்திரவதை செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கல்லூரியில் மத பாகுபாடு உள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர். சலாம் என்ற வார்த்தையைக் கூட தங்களால் பயன்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரியில் இதர மாணவிகள் துலு மொழியில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், எங்களுக்கு உருதுவில் பேச அனுமதி இல்லை என்றார்.