கர்நாடக அரசியலில் திடுக் திருப்பங்கள்.. குமாரசாமி கட்சியே காணாமல் போக வாய்ப்பு.. ஒரே நாளில் 2 பல்டி
பெங்களூர்: போகிற போக்கை பார்த்தால், கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூடாரம் மொத்தமாக காலியாகிவிடும் போல இருக்கிறது. இப்படியே நிலைமை நீடித்தால், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே கர்நாடகாவில் செல்வாக்கு மிக்க கட்சிகளாக மாறிவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அல்லது பாஜக ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலம் முழுக்க செல்வாக்கு இருக்கிறது. பாஜகவுக்கு வட கர்நாடகத்தில் செல்வாக்கு இருக்கிறது. குறிப்பாக எடியூரப்பா சார்ந்த லிங்காயத்து ஜாதியினர் மத்தியில் செல்வாக்கு அதிகம்.
எனவே பாஜக தனிப்பெரும் கட்சியாக சில தேர்தல்களில் உருவெடுத்தாலும், பெரும்பாலும் அறுதிப்பெரும்பான்மை பெறுவது கிடையாது.
அதே நேரம், காங்கிரஸ் கட்சி, சித்தராமையா தலைமையில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி முடித்தது அனைவரும் அறிந்ததுதான்.
மகரவிளக்கு பூஜைக்கு பின் இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் யாத்திரை போகும் சபரிமலை பேப்பர் ஏஜெண்ட்!
மதசார்பற்ற ஜனதாதளம்
இந்த விஷயத்தில்தான் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி துருப்புச் சீட்டாக செயல்பட்டு வருகிறது. தெற்கு கர்நாடக பகுதியில் செல்வாக்கு உள்ள அந்த கட்சி எப்போதும் குறைந்தபட்சம் 30க்கு மேற்பட்ட தொகுதிகளை வெல்வது வழக்கம். அதிகபட்சமாக 50 தொகுதிகளுக்கு மேல் வெல்வது கிடையாது. ஏனெனில் மாநிலத்தின் பிற பகுதிகளில் அந்த கட்சிக்கு அவ்வளவு செல்வாக்கு கிடையாது.
ஒக்கலிகர் ஜாதி ஓட்டு
தெற்கு கர்நாடகாவில் அதிகமாக இருக்கக்கூடிய ஒக்கலிகர் ஜாதியினர் வாக்குகள், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு அதிக அளவுக்கு செல்வதுதான் அவர்களின் வெற்றிக்கு காரணம். முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரது மகன் குமாரசாமி, ரேவண்ணா உள்ளிட்டோர் ஒக்கலிகர் ஜாதி வாக்குகளை தங்கள் பக்கம் வைத்திருப்பதில் எப்போதும் வெற்றி பெற்று வருகிறார்கள். இதை வைத்துக் கொண்டு எந்த கட்சிக்கு ஆதரவு குறைவாக இருக்கிறதோ அந்த கட்சிக்கு ஆதரவு கொடுத்து அரசில் அங்கம் வகிப்பது, அல்லது பாதி காலம் நாங்கள், மீதி காலம் நீங்கள், என்று ஒப்பந்தம் போட்டுக்கொள்வது மஜத கட்சியின் வழக்கமாக மாறி விட்டது.
மாறி மாறி ஆட்சி
இந்த கொள்கையினால் அதிகாரத்தை அந்த கட்சி அவ்வப்போது சுவைக்க முடிந்தது என்றாலும், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடமும் மாறி மாறி கூட்டணி வைத்ததால், அக்கட்சி மீதான மதிப்பு குறைய தொடங்கி விட்டது. தற்போது பாஜக மத்தியில் பெரும் பலத்தோடு இருப்பதால், காங்கிரஸ் கட்சியில் இருந்துகூட சில எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் தாவி சென்றனர். இதன் காரணமாக இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிலும் பாஜக வெற்றி பெற்றது.
விவசாய சட்டம்
இப்படியான சூழ்நிலையில்தான், விவசாயிகளின் நண்பன் என்று அறியப்படும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, கர்நாடக சட்டசபையில் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டு அதிர்ச்சியளித்தது. பாஜகவுடன் நெருக்கமாக குமாரசாமி விரும்புவதுதான் , இதற்கு காரணம் என்கிறார்கள். விவசாயிகள் கட்சி என்று தங்களைக் காட்டிக் கொள்ளும் ஒரு கட்சி, பெங்களூர் வெளிவட்ட சாலையை நைஸ் நிறுவனம் அமைத்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதற்காக நீண்ட காலமாக முட்டுக்கட்டை போட்டு வரும் ஒரே கட்சி, மஜத. ஆனால் இவ்வளவு போராட்டங்கள் நடக்கக்கூடிய ஒரு சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து விட்டது அந்த கட்சி.
ஒரே நாளில் பல்டியடித்த குமாரசாமி
இத்தனைக்கும் இதற்கு ஒரு நாள் முன்புதான் நாடு தழுவிய அளவில் விவசாயிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்திற்கு அந்த கட்சி ஆதரவு தெரிவித்தது. ஒரே நாளில் இரண்டு பக்கம் பல்டி அடித்துள்ளது மதசார்பற்ற ஜனதா தளம். பாஜக பக்கம் குமாரசாமி திடீரென செல்ல காரணம் தெரியுமா? தேவகவுடாவுக்கு வயதாகிவிட்டது, குமாரசாமி அவ்வப்போது பல்டி அடித்து தனது கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார். எனவே இந்த கட்சியை நம்பி பலனில்லை என்று பல எம்எல்ஏக்கள் முடிவுக்கு வந்துவிட்டனர்.
தாவ தயாராகும் எம்எல்ஏக்கள்
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 34 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது. இதில் சுமார் 12 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் அல்லது பாஜக கட்சிகளுக்கு மாற திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது தாவினால் இடைத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதால் 2023 ஆம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்கள் முன்பாக விடை பெறுவது என்று திட்டமிட்டுள்ளனர். அதிர்ச்சி என்னவென்றால்.. கர்நாடக மாநில மதசார்பற்ற ஜனதா தள தலைவர் என்ற பதவியில் உள்ள ஹெச்.கே.குமாரசாமி என்ற மூத்த எம்எல்ஏவும் இதில் ஒருவர் என்று கூறப்படுகிறது. இவர் பாஜக பக்கம் சாய போகிறார் என்கிறார்கள்.
அதிகரிக்கும் டி.கே.சிவகுமார் பலம்
மற்றொரு சீனியர் எம்எல்ஏ சீனிவாசன், காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும், காங்கிரசுக்கு போவதாகவும் கூறப்படுகிறது. சிவகுமார் ஒக்கலிக சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரும் தெற்கு கர்நாடகா பிராந்தியத்தில் உள்ள ராம்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர். இதுதான் குமாரசாமியின் சொந்த மாவட்டமும் கூட. டிகே சிவகுமார் பக்கம் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முக்கிய எம்எல்ஏக்கள் போய்விட்டால், ஒக்கலிகர் வாக்கு வங்கி முழுக்க சிவகுமார் பக்கம் சென்று விடும் வாய்ப்பு இருக்கிறது.
குமாரசாமியின் ஒரே நோக்கம்
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி பலமாக இருக்க கூடிய ஒரே பகுதியிலும் அந்த கட்சி தனது வேர்களை இழந்து விடும் நிலை உருவாகி விட்டது. எனவே குமாரசாமி பல்டி அடித்துவிட்டார் என்று பழி வந்தாலும் பரவாயில்லை.. பாஜக பக்கம் போய் கட்சியை காப்பாற்றுவது நல்லது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். டிகே சிவக்குமார் தனது ஆதிக்கத்தை வளர்த்துவிடக் கூடாது என்பதுதான் இப்போது குமாரசாமியின் ஒரே கவலையாக இருக்கிறது. எனவே காங்கிரஸ் கட்சியை நோக்கி விமர்சன கணைகளை ஆரம்பித்துவிட்டார் குமாரசாமி.
மஜத நிலைமை என்னவாகும்?
இதையெல்லாம் கவனித்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா, குமாரசாமி ஒரு லீடர் கிடையாது அவர் ஒரு டீலர் என்று கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பாஜக பக்கம் குமாரசாமி நெருங்குவதால் அந்த கட்சியை பாஜக விட்டு விடுமா, அல்லது தாவ விரும்பும் மதார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு குமாரசாமிக்கு கல்தா கொடுத்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை இத்தோடு முழுமையாக முடித்து வைக்குமா என்பது வருங்காலங்களில் தெரியும்.