அணை கட்டுறாங்க.. தமிழ் எழுத்துக்களை அழிக்கிறாங்க.. அத்துமீறும் கர்நாடகா.. காரணம் என்ன?
பெங்களூர்: கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடைபெறும் அத்துமீறல்கள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிடுவதில்லை என்ற குறை அங்குள்ள மக்களுக்கு இருக்கிறது.
Recommended Video
"வீரப்பனாரை" மிஸ் செய்வதாக அவர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
இதற்கு காரணம், சமீபத்தில் கோலார் தங்கவயலில் தமிழ் பெயர் பலகையை வாட்டாள் நாகராஜ் மற்றும் அவர் அமைப்பினர் தார்பூசி அழித்தது, அதற்கு முன்பாக இதே நபர்கள், தாளவாடி பகுதியில் தமிழ் பெயர் பலகையை அழித்தது, பெங்களூரில் தமிழில் பேசிய தள்ளுவண்டி வெங்காய வியாபாரியை தாக்கியது என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

உடனே தலையிட கோரிக்கை
கர்நாடக தமிழர்களுக்கு மட்டும் இல்லை, தமிழ்நாட்டுக்கு கர்நாடகாவிலிருந்து வரும் நதி நீரையும் தடுத்து சுயநல தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போய் விட்டது கர்நாடக அரசு. கன்னட அமைப்புகள் ஒரு பக்கம், கர்நாடக அரசு மறுபக்கம் என முறையே, கர்நாடக வாழ் தமிழர்களுக்கும், தமிழக தமிழர்களுக்கும் தொடர்ந்து தொல்லைகள் தர ஆரம்பித்துள்ளனர். கேரளாவில் கன்னட பெயரிலுள்ள ஊர்களை மலையாள பெயர்களாக அரசு மாற்றியதை தட்டிக் கேட்டு கடிதம் எழுதியுள்ளார் எடியூரப்பா. ஆனால், கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும் விவகாரங்களில் தமிழக அரசு உடனே குரல் எழுப்பவில்லை என்ற முனுமுனுப்புகள் எழ ஆரம்பித்துள்ளன.

தென்பெண்ணை நதி
தென்பெண்ணை, மார்கண்டேய நதியின் குறுக்கே யார்கோள் என்ற இடத்தில், பிரமாண்ட தடுப்பு அணையை கட்டி முடித்துவிட்டது கர்நாடகா. கடந்த 10 வருடங்களாக தமிழ்நாடு அரசு, இந்த விஷயத்தை கவனிக்காமல் விட்டதன் விளைவுதான் நிலைமை இவ்வளவு தூரம் போகக் காரணம் என்கிறார்கள் விவசாய சங்கத்தினர். "வீரப்பன் உயிரோடு இருந்தவரை கர்நாடக வனப் பகுதிக்குள் அணை கட்டும் தைரியம் யாருக்கும் வந்தது கிடையாது, தாளவாடி பகுதிக்கு வாட்டாள் செல்ல கனவிலும் நினைத்தது கிடையாது. ஆனால் இப்போது எல்லாமே நடக்கிறது என்கிறார்" கர்நாடகாவைச் சேர்ந்த தமிழ் அமைப்பு தலைவர் ஒருவர்.

நீதிமன்ற தீர்ப்பு
இந்த விவாகரங்கள் பற்றி, கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் கோபி ஏகாம்பரத்திடம் கேட்டோம். அதற்கு அவர், "கர்நாடகா உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. இதில் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக பேசப்போவது கிடையாது. ஆனால் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை எந்த அரசாக இருந்தாலும் செய்ய வேண்டும். கர்நாடகா அதை செய்யவில்லை" என்றார்.

வீரப்பன் பற்றிய பேச்சு
வீரப்பன் குறித்த பேச்சுக்கள் கர்நாடக தமிழர்களிடம் அதிகரித்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது உண்மைதான். சமீபத்தில் கர்நாடக தமிழர் பாதுகாப்பு தொடர்பாக, பாஜகவைச் சேர்ந்த ஒரு பிரபல எம்.பி.யை சந்தித்து பேசினோம். அவரும் கூட வீரப்பனார், குறித்து நல்ல மரியாதை வைத்திருந்ததை பார்க்க முடிந்தது. வீரப்பனார் அரசியலுக்கு வந்திருந்தால் நல்லா இருந்திருக்கும். சந்தன கடத்தல் விவகாரங்களால்தான் திசை மாறிவிட்டார் என்று அவர் ஆதங்கம் தெரிவித்தார்.

தமிழகத்திற்காக கோரிக்கை
கன்னட மக்கள் கடவுளை போல நினைத்தது நடிகர் ராஜ்குமாரைத்தான். அவரையே வீரப்பனார், எளிதாக கடத்திச் சென்று பணயக் கைதியாக வைத்ததை பார்த்து கன்னட அமைப்பினர் பலருக்கும் பயம் ஏற்பட்டது. வீரப்பனார், தனிப்பட்ட கோரிக்கைகளை வைத்ததைவிட, காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும், தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து முறையாக தண்ணீர் போக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழர் நலன் சார்ந்து வீரப்பனார் செயல்பட்டதால், தமிழகத்திற்கு எதிராகவோ, கர்நாடக தமிழர்களுக்கு எதிராகவோ, செயல்பட எல்லோருக்குமே தயக்கம் இருந்தது. இப்போது ஈஸியாக எல்லாம் அரங்கேறுகிறது என்றார் கோபி ஏகாம்பரம், ஆதங்கத்தோடு.

தமிழ்நாடு முதல்வரை சந்திக்க திட்டம்
கர்நாடகாவில் தமிழர்களுக்கு நிகழும் பாரபட்சம் அரசியல் சாசனத்திற்கே எதிரானது. ஆனால் இதுகுறித்து பலருக்கும் தெரியவில்லை. அரசு உடமைகளில் உள்ள தமிழ் எழுத்துக்களை அழிக்கிறார்கள், தமிழ் பேசினால் அடிக்கிறார்கள், ஆனால் போலீஸ் வழக்குப் பதிவு செய்வது கிடையாது. உரிய ஆதாரங்களோடு விரைவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கர்நாடகாவிலுள்ள நிலவரங்களை தெரிவிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications