ஒலிபெருக்கி உள்ளதாம்.. பெங்களூரில் 14 மசூதிகள் மீது பாய்ந்த வழக்கு.. பின்னணி இதுதான்!
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஒலிபெருக்கி பயன்பாட்டில் விதிமீறியதாக 14 மசூதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒலிபெருக்கி பயன்பாட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறக்கூடாது என போலீசார் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கூறினார். இது கர்நாடகத்திலும் எதிரொலித்தது.
கர்நாடகத்தில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கி அதிக சத்தத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என இந்துத்துவ அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை செய்யாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

மசூதிகளுக்கு நோட்டீஸ்
கர்நாடகத்தை பொறுத்தவரை பொது இடங்களில் ஒலிபெருக்கி பயன்பாடு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. ஆனால் இது கடைப்பிடிக்கப்படாமல் இருந்தது. தற்போது இந்துத்துவ அமைப்பினர் கோரிக்கை வைத்ததால் கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தான் மதவழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். இதுதொடர்பாக மாநிலங்களில் உள்ள மசூதிகள், கோவில்கள், சர்ச்க்கள், பப்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. குறிப்பாக மாநிலம் முழுவதும்250 மசூதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நோட்டீசில் இருந்தது என்ன
இந்த நோட்டீசில் அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவில் ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும். ஒலிமாசு, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இதில் விதிமீறல் கூடாது. மேலும் ஒலி மாசு ஏற்படுத்தும் கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.

14 மசூதிகள் மீது வழக்கு
இந்நிலையில் தற்போது சில மசூதிகள் ஒலிபெருக்கியின் சத்தத்தை கட்டுப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. மேலும் பொதுமக்கள் சார்பிலும் புகார்கள் செய்யப்பட்டன. இதையடுத்து போலீசார் கண்காணித்தனர். விதிமீறியதாக மசூதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெங்களூரில் இதுவரை மொத்தம் 14 மசூதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

4 பப்கள் மீது நடவடிக்கை
இதுதவிர பெங்களூருவில் அதிக சத்தத்தில் பாடல்கள் இசைக்கப்பட்டுள்ளதாக சில பப்கள் மீது புகார் எழுந்தது. இதையும் இரவு நேர கண்காணிப்பு பணியின்போது போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சில பப்களில் அளவுக்கு அதிகமான சத்தத்தில் பாடல்ள் ஒலிக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக 4 பப்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications