பெங்களூரில் கொரோனா கேஸ் சரிவு.. சந்தோஷப்படத்தான் முடியாது.. டெஸ்ட் எண்ணிக்கையை குறைத்ததுதான் காரணம்
பெங்களூர்:பெங்களூர் நகரில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும் கூட பரிசோதனை அளவு குறைக்கப்பட்டுள்ளது காரணமாகத்தான் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது என்கிறார்கள் சுகாதார துறை வல்லுனர்கள்.
கொரோனா நோய் பாதிப்பு மிக மோசமாக கர்நாடகாவை தாக்கியுள்ளது. அதிலும், பெங்களூர் நகரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மே 10ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை கடுமையாக்கி உள்ளது கர்நாடக அரசு.

இந்த நிலையில்தான் தினசரி பாதிப்பு 23 ஆயிரம், 27 ஆயிரம் என்ற அளவுக்கு மோசமாக சென்று கொண்டிருந்த பெங்களூர் நகரில், தற்போது 15 ஆயிரம், 16 ஆயிரம், 17 ஆயிரம் என்ற அளவுக்கு நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசு தினசரி வெளியிடும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதை நினைத்து சந்தோசப்படுவதா என்றால் இல்லை என்பதுதான் விடையாக இருக்கிறது. ஏனென்றால் ஏப்ரல் 13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் மாநகராட்சி தினசரி 85 ஆயிரத்து 829 என்ற அளவுக்கு பரிசோதனைகளை நடத்தியது. அதேநேரம் ஏப்ரல் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையில் மாநகராட்சி சராசரியாக 76 ஆயிரத்து 30 பரிசோதனைகளை மட்டும்தான் நடத்தியது .
ஏப்ரல் 28-ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை இது மேலும் குறைந்து 62,018 என்ற அளவுக்கு சரிந்தது. இப்போது நிலைமை இன்னும் மோசம் . மே 5-ம் தேதி முதல் 11ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் வெறும், 53 ஆயிரத்து 114 பேருக்கு மட்டும்தான் தினசரி பரிசோதனை நடந்து உள்ளது. இந்த அளவை வைத்துக் கொண்டு நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து விட்டதாக மகிழ்ச்சி அடைவதில் என்ன லாஜிக் இருக்கமுடியும் என்று கேட்கிறார்கள் மருத்துவத்துறை நிபுணர்கள்.
அதேநேரம் பெருநகர பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையாளர் கவுரவ் குப்தா அளித்துள்ள பேட்டி ஒன்றில், அறிகுறி இருப்பவர்கள் மட்டும்தான் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தற்போது அறிகுறி குறைந்து இருப்பதுதான் பரிசோதனை குறைவதற்கு காரணம். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் வருகைதரும் பயணிகள் இல்லை. எனவே பஸ் நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் பரிசோதனைகள் நடத்த தேவை இல்லை என்பதால், பரிசோதனை அளவு குறைந்துள்ளது. வேண்டுமென்றே பரிசோதனை அளவை குறைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மே மாதம் 5 மற்றும் 6ம் தேதிகளில் சராசரியாக பெங்களூர் நகரில் தினசரி பாதிப்புகள் 23 ஆயிரம் என்ற அளவுக்கு இருந்தன. எனவே இந்த நகரத்தில் நோய்த்தாக்கம் உச்சகட்டத்தை அடைந்து விட்டது எனவே அது குறையத் தொடங்கியுள்ளது என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள். இது ஒரு பக்கம் என்றால் அரசு புள்ளிவிவரப்படி இப்போது மருத்துவமனைகளில் கூட்டம் குறைந்து இருக்க வேண்டும். ஆனால் பெங்களூர் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் குறையவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
பெங்களூர் நகரில் உள்ள மருத்துவமனைகளில் ஐசியு மற்றும் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஐசியு ஆகியவற்றில் பெட் இல்லை என்றுதான் மாநகராட்சியிடம் இருந்து பதில் வருகிறது. மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் எண்ணிக்கை, அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களுக்கு ஏற்ப குறைந்து இருக்க வேண்டுமே. ஆனால் ஏன் அப்படி நடக்கவில்லை. இதுதான் இப்போது மக்களிடமும் சுகாதாரம் வல்லுனர்களிடம் இருக்கக்கூடிய கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications