தமிழ்நாடு பாணியில் புதிய கல்வி கொள்கையை நிராகரித்த கர்நாடகா அரசு! மாநில கல்வி கொள்கை இனி அமல்!
பெங்களூர்: கர்நாடகாவில் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் அறிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஆளும் திமுக, மாநில கல்வி கொள்கையை அமல்படுத்துவது என முடிவு செய்து குழுவையும் அமைத்துள்ளது.

இதே பாணியில் தற்போது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசும் களமிறங்கி உள்ளது. பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறியதாவது: மாநில பல்கலைக் கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்கள் கூட புதிய கல்விக் கொள்கையில் ஆர்வம் காட்டாத நிலைதான் இருந்து வருகிறது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இந்த புதிய கல்வி கொள்கையை நிராகரிப்பதாகவும் அறிவித்திருக்கின்றன. தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை நிராகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் மாநில அரசின் கல்வி கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான ஒரு குழுவையும் அமைக்க மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த குழு புதிய மாநில கல்வி கொள்கை குழு குறித்து பரிந்துரைகள் வழங்கும் என்றார்.

முன்னதாக மாநில அரசி இத்தகைய முடிவு எடுப்பதற்கு முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். கர்நாடகா அரசின் இத்தகைய போக்கு முட்டாள்தனமானது என விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த மாநில அமைச்சர் தினேஷ் குண்டுராவ், மாநிலங்களின் பட்டியலில்தான் கல்வி இருந்து வந்தது. மாநிலங்களின் கல்வி கொள்கையை மத்திய அரசு தீர்மானிக்க முடியாது. நாங்கள் யாரும் யாருக்கும் அடிமை இல்லை. பாஜக தலைவர்கள் இதில் அமைதி காக்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications