இதுதான் ஊமைக்குத்தா? ‛மோடி.. மோடி‛ கோஷம்! சித்தராமையாவை பார்த்து பிரதமர் கூறிய வார்த்தை - வீடியோ
பெங்களூர்: பிரதமர் மோடி மேடையில் பேசியபோது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ‛‛மோடி.. மோடி..'' என தொடர்ந்து கோஷமிட்ட நிலையில் திடீரென கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை நோக்கி சிரித்தபடி பிரதமர் மோடி கூறிய வார்த்தை தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக வந்துள்ளார். நேற்று சென்னையில் கேலோ இந்தியா போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். மாலையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.

அதன்பிறகு நாளை தனுஷ்கோடி செல்லும் பிரதமர் மோடி அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். முன்னதாக தமிழகம் வருவதற்கு முன்பு பிரதமர் மோடி பெங்களூர் சென்றிருந்தார். பெங்களூர் புறநகரில் தேவனஹள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‛போயிங் புதிய குளோபல் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி சென்டர்'-யை அவர் திறந்து வைத்தார்.
ரூ. 1,600 கோடியில் 43 ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவிற்கு வெளியே விமானத் தயாரிப்பாளரின் மிகப்பெரிய முதலீடாக இது அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி மேடையில் பிரதமர் மோடி பேசினார். அப்போது இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து அவர் பேசிவந்தார்.
"Aisa hote rahta hai" PM Modi trolls Siddaramaiah as people raise Modi Modi slogans 🤣🤣🤣pic.twitter.com/UV8xFY5gPh
— Mr Sinha (@MrSinha_) January 19, 2024
அப்போது அவர் கூறுகையில், ‛‛உலகளாவிய விமான சந்தைக்கு இந்தியா புதிய உத்வேகத்தை அளிக்க உள்ளது. விமான துறையில் தொடர்ந்து நாம் மேம்பட்டு வருகிறோம். இந்திய விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண்கள். இது உலக சராசரியை ஒப்பிடும்போது 3 மடங்கு அதிகம். பெண்கள் தலைமையில் வளர்ச்சிக்கான நேரம் என்பது வந்துவிட்டது. மேலும் போயிங் மையம் என்பது உலகளாவிய விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்கான அடுத்த தலைமுறை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த உதவும்.
பெங்களூரு இந்தியாவின் தொழில்நுட்ப திறனை உலகளாவிய தேவையுடன் இணைக்கிறது. போயிங்கின் இந்த வளாகம் என்பது பெங்களூரின் அடையாளத்தை இன்னும் பலப்படுத்தும். நாட்டில் நிலையான அரசு உள்ளது. மேலும் ‛மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு இந்த மையம் முக்கியமானதாக இருக்கும்'' என்றார். இந்த வேளையில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ‛‛மோடி.. மோடி..'' என கோஷமிட்டனர்.
இதில் பூரித்துப்போன மோடி மேடையில் முதல்வர் சித்தராமையா இருக்கும் திசையை நோக்கி திரும்பி ‛‛முக்கியமந்திரி ஜி அய்சா ஹோத்தா ரெஹ்தா ஹை'' என புன்முருவலுடன் கூறினார். இதனை கேட்டவுடன் முதல்வர் சித்தராமையா உள்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சிரித்துவிட்டனர். அதாவது பிரதமர் மோடி, சித்தராமையாவை நோக்கி திரும்பி, ‛‛ மரியாதைக்குரிய முதல்வரே, இது தொடர்ந்து நடக்கிறது'' என்றார்.
பிரதமர் மோடி இப்படி கூறியதன் பின்னணியில் ஒரு முக்கிய விஷயம் உள்ளது. அதாவது பிரதமர் மோடி கடந்த 2ம் தேதி தமிழகம் வந்தார். திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை அவர் திறந்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேச்சை தொடங்கினார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் ‛‛மோடி.. மோடி..'' என கோஷமிட்டனர். இதனால் முதல்வர் ஸ்டாலின் சில வினாடிகள் பேச்சை நிறுத்தினார். இந்த வேளையில் மோடி மேடையில் இருந்தபடி கோஷத்தை நிறுத்தும்படி சைகை காட்டினார்.
அதேபோல் தான் பெங்களூர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, ‛‛மோடி.. மோடி..'' என கூட்டத்தில் இருந்தவர்கள் கோஷமிட்ட நிலையில் ‛‛இது தொடர்ந்து நடக்கிறது முதல்வரே'' என சித்தராமையாவிடம் கூறி பிரதமர் மோடி சிரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வீடியோவை தற்போது பாஜகவினர் வலைதளங்களில் பதிவிட்டு பிரதமர் மோடி, சித்தராமையாவை ட்ரோல் செய்துள்ளதாக கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications