மீண்டும் சவார்க்கரை தொட்ட ராகுல் காந்தி.. பாஜக, ஆர்எஸ்எஸ்-க்கு வந்ததே கோபம்! ஆவேச பதிலடி
பெங்களூர்: சவார்க்கரை விமர்சித்து ராகுல் காந்தி பேசி இருந்த நிலையில், அதற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பதிலடி கொடுத்து உள்ளது.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் பாஜகவுக்கு எதிராகத் தொண்டர்களை ஒருங்கிணைக்கவும் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் மொத்தம் 150 நாட்கள் பாத யாத்திரை செல்கிறார்.
கடந்த மாதம் கன்னியாகுமரியில் பாத யாத்திரை தொடங்கிய ராகுல் காந்தி, காஷ்மீரில் பாத யாத்திரை நிறைவு செய்கிறார். தமிழகம் மற்றும் கேரளாவில் இப்போது அவர் பாத யாத்திரையை முடித்து உள்ளார்.
என்ன அப்படியே ரூட் மாறுது.. 'அவருக்கு பக்கத்திலா?’ அப்செட்டான எடப்பாடி - 'நெக்ஸ்ட் மூவ்’ பரபர ஆலோசனை
ராகுல் காந்தி
இதனிடையே அவர் இப்போது கர்நாடகாவில் பாத யாத்திரை சென்று கொண்டு இருக்கிறார். காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று என்பதாலும் அடுத்தாண்டு இங்குத் தேர்தல் நடைபெறுவதாகவும் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பை மிகக் கடுமையாகச் சாடி பேசினார். ஆர்எஸ்எஸ் ஆங்கிலேயர்களுக்கு உதவியதாகவும் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடமிருந்து உதவித்தொகை பெற்றவர் என்றும் விமர்சித்துப் பேசினார்.
ஆர்எஸ்எஸ்
கர்நாடக மாநிலம் தும்கூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "எனக்குத் தெரிந்த வரை ஆர்எஸ்எஸ் அமைப்பு அந்த காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு உதவியே வந்தது. சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடமிருந்து உதவித்தொகை பெற்றவர். சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை. ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் பாஜக என்ற கட்சியே கிடையாது. இதுபோன்ற உண்மைகளை பாஜகவால் ஒருபோதும் மறைக்க முடியாது. காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் சுதந்திரத்திற்காகப் போராடினர்" என்று நேரடியாக விமர்சித்தார்.
தேச விரோதம்
தொடர்ந்து பிஎஃப்ஐ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை குறித்துப் பேசிய ராகுல் காந்தி, "வெறுப்பும் வன்முறையும் எந்த வடிவில் வந்தாலும் அது தேசத்திற்கு எதிரான ஒன்று தான். அப்படி வெறுப்பைப் பரப்புவோருக்கு எதிராக இந்தியா போராட வேண்டும். வெறுப்பைப் பரப்புபவர் யாராக இருந்தாலும்.. அவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்.. இந்த தேச விரோத செயலுக்கு எதிராகவும் அதைச் செய்பவர்களுக்கு எதிராகவும் நாங்கள் போராடுவோம்.
கல்வி முறை
மத்திய அரசு இப்போது கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை நாங்கள் முழுமையாக எதிர்கிறோம். ஏனென்றால் அது நமது நாட்டின் பண்பாட்டின் மீதான தாக்குதல்.. அது நமது வரலாற்றைச் சிதைக்கிறது. இந்த புதிய கல்விக் கொள்கை ஒரு சிலரின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்கிறது. ஆனால், நமக்குத் தேவை பரவலாக்கப்பட்ட கல்வி முறை. அது நமது கலாசாரத்தை பரப்புவதாக இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
பாஜக
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்திற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், "சுதந்திர போராட்டத்தின் போது, பல ஆயிரம் இளைஞர்களுக்கு உத்வேகமாக இருந்த சாவர்க்கரை ராகுல் காந்தி மீண்டும் இழிவுபடுத்தி உள்ளார். இந்திய வரலாறு குறித்தோ காங்கிரஸ் வரலாறு குறித்தோ எதாவது அவருக்குத் தெரியுமா
பதிலடி
இதுபோன்ற கருத்துகள் இந்திய வரலாற்று குறித்த ராகுல் காந்தியின் அறிவையே காட்டுகிறது. சந்திர போராட்டத்தில் நீண்ட நாட்கள் சிறையில் இருந்த ஒரு சில வீரர்களில் சாவர்க்கரும் ஒருவர். அவர் 11 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இன்னும் கூட இந்தியர்களின் இதயத்தில் சாவர்க்கர் வாழ்ந்து வருகிறார். இந்தியர்களின் மனங்களிலிருந்து சாவர்க்கரை யாராலும் அழிக்க முடியாது" என்று பதிலடி கொடுத்து உள்ளார்.
விரக்தி
இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார், "சாவர்க்கர் மற்றும் ஆர்எஸ்எஸ் குறித்து ராகுல் காந்தி கூறிய அனைத்தும் பொய். இது இப்போது காங்கிரஸின் ஃபேஷன் ஆகிவிட்டது. சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், ஆங்கிலேயர்கள் அவருக்கு ஆயுள் தண்டனைக்குக் கொடுத்தார்கள். ராகுல் காந்தி இப்படிப் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். சுதந்திரத்தின் போது பிரிவினையை ஆதரித்ததே நேரு தான். அரசியலில் தோல்வி அடைந்துவிட்டதால் ராகுல் விரக்தியில் இப்படிப் பேசி வருகிறார்" என்றார்.
பாத யாத்திரை
ராகுல் காந்தி இப்போது கன்னியாகுமரியில் தொடங்கி 12 மாநிலங்கள் வழியாகக் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொள்கிறார். தினசரி 25 கி.மீ தூரம் விகிதம் மொத்தம் 3,500 கிமீ பாத யாத்திரை செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. 2024 பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் இந்த பாத யாத்திரையை மேற்கொண்டு இருக்கிறது. கர்நாடகாவில் மொத்தம் அவர் 21 நாட்களுக்குப் பாத யாத்திரை செல்கிறார். கர்நாடகாவில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குக் காங்கிரஸ் வலுவாக உள்ள நிலையில், அடுத்தாண்டு தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.