விறகு விற்று தாய் படிக்க வைத்தார்! பெங்களூர் புத்தக திருவிழாவில் ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ் பேச்சு!
பெங்களூர் : சாதாரண அங்கன்வாடி ஊழியராக இருந்த என் தாய் விறகு விற்று என்னை படிக்க வைத்தார் என பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனரும், சுற்றுலாத்துறை இயக்கனருமான ராம்பிரசாத் மனோகர் பெங்களூர் புத்தக திருவிழாவில் பேசியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக பெங்களூருவில் அதிக அளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முதன் முறையாக கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழ் புத்தக விழா கடந்த 25ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அல்சூரில் உள்ள தமிழ் சங்கம் வளாகத்தில் 25ஆம் தேதி தொடங்கி 8 நாட்களுக்கு இந்த தமிழ் புத்தக திருவிழா நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவில் பிரபலமான 25 புத்தக பதிப்பு நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது அரங்குகளை அமைத்துள்ளனர்.

தமிழ்ப் புத்தகத் திருவிழா
25ஆம் தேதி நடைபெற்ற தொடக்க விழாவில் மக்களவை உறுப்பினர் மோகன் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிலையில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விழாவை தொடங்கி வைத்தார் இந்த புத்தக தரப்பில் சங்க காலம் தொடங்கி நவீன காலம் வரையிலான ஆயிரக்கணக்கான இலக்கியப் படைப்புகளும் புத்தகங்களும் 10 சதவீத தள்ளுபடி விற்பனை விலையில் விற்கப்படுகிறது. தினமும் காலை 11:00 மணி முதல் 8 மணி வரை இந்த புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

மாணவர்களுக்கு போட்டிகள்
குறிப்பாக பெங்களூர் மாநகராட்சி ஆணையர் ராம் பிரசாத் மனோகர் உள்ளிட்டவர்களின் உதவியால் 2000 மாணவர்களுக்கு 2 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழர்களிடையே குறிப்பாக பள்ளி மாணவர்களிடம் தமிழ் மொழியை கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த திருவிழாவில், ஒரு பகுதியாக 8 நாட்களுக்கும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

ராம்பிரசாத் மனோகர்
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனரும், சுற்றுலாத்துறை இயக்கனருமான ராம்பிரசாத் மனோகர், மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசளித்தார். இதே வேளையில், 2,000 மாணவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கி சிறப்பித்தார்.

படிப்பு
நிகழ்ச்சியில் பேசிய அவர்," ஏழை, எளிய மாணவர்களாலும் சாதிக்க முடியும். பணம் இல்லாமல் இருக்கலாம். படிப்பு இல்லாமல் இருக்க முடியாது. படிப்பு இல்லை என்றால் எதுவும் சாதிக்க முடியாது. கல்வி தான் ஒரு மனிதனை மேம்படுத்தும். பல தடைகள், இடையூறுகள் ஏற்படும். கஷ்டப்பட்டு படித்து விட்டால், தடைகளை தகர்த்து விடலாம். நான் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக உங்கள் முன் நிற்பதற்கு படிப்பு தான் காரணம்.

புத்தகங்கள்
சாதாரண அங்கன்வாடி ஊழியராக இருந்த என் தாய் விறகு விற்று என்னை படிக்க வைத்தார். தந்தை தபால் அலுவலகத்தில் பணி புரிந்தார். பல கஷ்டங்கள் இருந்தாலும், தன் மகன் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் லட்சம் கண்டனர். அதே விடா முயற்சியுடன் செய்தனர். அது போன்று, இங்குள்ள பல பெற்றோர் எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். புத்தகம் வாழ்வை மேம்படுத்தும் என்பதாலேயே பரிசாக அளிக்க தீர்மானித்தேன். ஒரு புத்தகம் ஒரு மனிதனை மாற்றும்" என அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications