மசால் தோசை “பார்சல்”.. காங்கிரஸ் இன்னும் அனுப்பல! மோசடி பண்ணிட்டாங்க - ஏங்கும் பாஜக எம்பி தேஜஸ்வி
பெங்களூரு: காங்கிரஸ் கட்சி தனது வீட்டுக்கு பார்சல் தோசை அனுப்பி வைப்பதாக கூறிய நிலையில் 24 மணி நேரமாகியும் அது வரவில்லை ட்விட்டரில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்து உள்ளார்.
கர்நாடகா தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் கொட்டித் தீர்த்தது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளக்காடாகின. கட்டிடங்கள், குடியிருப்புகள் மழைநீரால் சூழப்பட்டன.
தலைநகர் பெங்களூரிலும் வழக்கத்தை விட அதிகளவில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வெள்ளத்தால் பல கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டது.
கருகும் 'காக்கி டவுசர்’.. நாள் குறித்த காங்கிரஸ்! பாஜக-RSS மீது அட்டாக்.. டி சர்ட் பதிவுக்கு பதிலடி
கனமழை வெள்ளம்
ஆகஸ்ட் 30ம் இரவு கொட்டிய கனமழையால் பெங்களூர் புறநகர் சாலையில் வெள்ளம் சூழ்ந்து கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் குறிப்பாக அங்குள்ள ஐடி நிறுவன ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஊழியர்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். கடந்த 4 ஆம் தேதி மட்டும் 130 மில்லி மீட்டர் மழை பதிவானது.
ஐடி நிறுவனங்கள்
இதனால் பெல்லந்தூர் ஏரியில் இருந்து வெளியேறிய நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். கனமழை வெள்ளம் காரணமாக ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், தீர்வு கிடைக்காவிட்டால் நிறுவனங்களை வேறு இடத்துக்கு மாற்றுவதாகவும் ஐடி நிறுவனங்கள் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதின.
எதிர்க்கட்சிகள்
இந்த நிலையில் பெங்களூருவில் முறையான வடிகால் வசதி இல்லாததாலும், மழையை முன்கூட்டியே கணிக்காததன் காரணமாகவுமே மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அடுத்த ஆண்டு கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் வெள்ளத்தின் தாக்கம் தேர்தல் வரை எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.
பாஜக எம்பி தேஜஸ்வி
ஒரு பக்கம் பெங்களூரு மாநகரம் வெள்ளத்தின் தவிக்க மறுபக்கம், பாஜகவின் இளைஞர் அணி தேசிய தலைவரும், பெங்களூர் தெற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா உணவகம் தோசை சாப்பிடும் வீடியோவை பதிவிட்டு விமர்சனம் செய்து இருந்தார். இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தேஜஸ்வி சூர்யாவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
தோசை வரவேயில்லை
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தேஜஸ்வி சூர்யா வீட்டுக்கு தோசை பார்சல் செய்யப்போவதாக அறிவித்தது. இந்த நிலையில் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள தேஜஸ்வி சூர்யா, "காங்கிரஸ் செய்தியாளர் சந்திப்பில் என் வீட்டுக்கு மசாலா தோசை பார்சல் அனுப்புவதாக கூறியது. 24 மணி நேரமாகியும் அது வரவில்லை. மோசடி செய்துவிட்டார்கள். தோசையை கூட முறையாக அனுப்பி வைக்க முடியாதவர்கள் நல்ல அரசை நடத்துவோம் என்று கனவு காண்கிறார்கள்." என்று பதிவிட்டுள்ளார்.