சசிகலா பெங்களூர் சிறையில் இருந்தபோது நடந்த முறைகேடுகள் என்ன? எப்.ஐ.ஆர் விவரத்தை கேட்கிறது ஹைகோர்ட்
பெங்களூர்: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சிறையில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சலுகைகள் குறித்து ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) தொடர்பான விவரங்களை சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹைகோர்ட் தலைமை நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா மற்றும் நீதிபதி சுராஜ் கோவிந்தராஜ் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இந்த விவரங்களை சீல் செய்யப்பட்ட உறையில், ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க ஏசிபிக்கு உத்தரவு பிறப்பித்தது.
சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சமூக சேவகரும் கல்வியாளருமான கே.எஸ்.கீதா என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4 வருடம் சிறை தண்டனை
சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த, ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி, 4 பேரையும் விடுதலை செய்தார். ஆனால் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், சிறப்பு நீதிமன்ற தீர்ப்புதான் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் தீர்ப்பு வருவதற்குள் ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் பெங்களூரிலுள்ள மத்திய சிறையில் 4 வருட காலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பல சலுகைகள்
இந்த காலகட்டத்தில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சசிகலா, இளவரசிக்கு தனி சமையலறை, மெத்தை படுக்கை உட்பட பல சலுகைகள் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. சசிகலா சிறை விதிகளை உடைத்து, பெங்களூரில் ஷாப்பிங் சென்றுவிட்டு சிறைக்கு திரும்பியதாக கூறப்பட்ட சிசிடிவி வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சிறைத்துறை டிஐஜிக்கு இதில் தொடர்பு இருப்பதாக ஐபிஎஸ் அதிகாரி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

ஓய்வு பெற்ற அதிகாரி விசாரணை
அப்போது கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை நடத்த சித்தராமையா உத்தரவிட்டார். இதையடுத்து, வினய் குமார் சிறையில் ஆய்வு செய்து, 295 பக்க அறிக்கையை சமர்ப்பித்தார்.

ஹைகோர்ட்டில் வழக்கு
இந்த நிலையில்தான் ஹைகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், கீதா தரப்பு வாதமாக இந்த விவகாரம் முன் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை வினய் குமார் ஆய்வு தொடர்பான இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பு வாதிட்டது.
ஆனால் 2018ல் ஏசிபி போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக, எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக மாநில அரசு, தரப்பில், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எப்.ஐ.ஆர் காப்பி
முந்தைய விசாரணையொன்றின்போது, மனுதாரரிடம், ஊழல் தடுப்புச் சட்டம், 1988 ன் விதிமுறைகளின் கீழ், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று மனுதாரரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் விசாரணையின் அடிப்படையில் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க மனு கோர முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
Recommended Video

முறைகேடு தகவல்கள்
ஆனால், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாக அரசே ஒப்புக் கொண்டுள்ளதால், அதன் விவரங்களை சீல் செய்யப்பட்ட உறையில் தரும்படி ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஆகஸ்ட் 25ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து காவல்துறை பதிவு செய்த விவரங்கள் அம்பலத்திற்கு வர வாய்ப்புள்ளது. சீலிட்ட உறை என்பதால் உடனடியாக இந்த விவரங்கள் வெளியாகாது என்றபோதிலும், விசாரணையின் பிற்பகுதியில் கோர்ட் இது தொடர்பான விவரங்களை வெளிப்படுத்தினால் அப்போது மக்களும் இதை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.












Click it and Unblock the Notifications