இளைஞர் காங்கிரஸ் தேர்தல்.. 64,000 பெரியதா..? 57,000 பெரியதா..? ராகுலிடம் சென்ற கர்நாடக பஞ்சாயத்து..?
பெங்களூரு: கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் 67,000 ஓட்டுக்கள் வாங்கி வெற்றி பெற்ற நபரை தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் ராகுல்காந்தி வரை பஞ்சாயத்திற்கு சென்றுள்ளது.
கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் சீதாராம் மகன் ரக்ஷா ராமையா, ஹாரிஸ் எம்.எல்.ஏ. மகன் முகமது நலப்பாடு மற்றும் மஞ்சுநாத் ஆகிய மூவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இவர்களில் ராமையா என்பவர் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இதேபோல் முகமது ஹாரிஸ் நலப்பாடுக்கு டி.கே.சிவக்குமாரின் ஆதரவும், மஞ்சுநாத்திற்கு முனியப்பாவின் ஆதரவும் இருந்தது.
இந்நிலையில் தேர்தல் முடிவில் முகமது ஹாரிஸ் நலப்பாடு என்பவர் 64,203 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் அவர் மீதுள்ள வழக்கை சுட்டிக்காட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் கட்சியை கடந்து காங்கிரஸை சர்ச்சைக்குள் சிக்க வைத்துள்ளது.
57,271 வாக்குகள் பெற்ற ராமையா கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி கொண்டு பல மாநிலங்களிலும் முக்கியப் பிரமுகர்கள் வெளியேறி வரும் சூழலில், கர்நாடகாவில் நடைபெற்ற இந்த விவகாரம் சற்று சீரியஸாகவே பார்க்கப்படுகிறது.
இதனிடையே தாம் தகுதியில்லாத நபர் என்றால் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் ஏன் வேட்புமனு கொடுக்கப்பட்டது என அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைமைக்கு முகமது ஹாரிஸ் நலப்பாடு கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்லாமியர்களை வாக்கு இயந்திரமாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துகிறது என்றும் ஆனால் பாஜக அப்படியல்ல எனவும் அக்கட்சி நிர்வாகிகள் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை சுட்டிக்காட்டி விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.