கொரோனாவுக்கு மட்டுமல்ல.. தேஜஸ்வி சூர்யாவின் மதவெறிக்கும் தடுப்பூசி போட்டுவிடுங்க.. காங்கிரஸ் குட்டு
பெங்களூர்: கொரோனாவுக்கு மட்டுமல்ல, தேஜஸ்வி சூர்யாவின் மதவெறிக்கும் தடுப்பூசி தேவைப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
பெங்களூரில் கொரோனா நோயாளிகளுக்கு பெருநகர் பெங்களூர் மாநகராட்சி மூலமாக மருத்துவமனைகளின் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
ஆனால், ஆக்சிஜன், வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு படுக்கையை ஒதுக்கீடு செய்யாமல் சாதாரண நோயாளிகள் பணம் கொடுத்தால் கூட அவற்றை ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

முஸ்லீம் ஊழியர்கள்
ஜெயநகர் பகுதியிலுள்ள பெங்களூரு தெற்கு மண்டலத்திற்கான வார் ரூம் அலுவலகம் சென்ற பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மற்றும் சில பாஜக எம்எல்ஏக்கள் அங்கே பணியாற்றக்கூடிய 17 முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பெயரை மட்டும் ஊடகத்துக்கு முன்பாக வாசித்துக் காட்டி, இவர்கள்தான் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சாட்டினார்.

தேஜஸ்வி சூர்யா
காவல்துறை நடத்திய விசாரணையில் இந்த குற்றச்சாட்டு பொய் என நிரூபணமானது. பாஜக அரசின் நிர்வாக தோல்வியை மறைக்க தேஜஸ்வி சூர்யா இப்படி ஒரு நாடகம் ஆடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனாலும் இதுவரை தேஜஸ்வி சூர்யா, இந்த பொய் புகாருக்கு மன்னிப்பு கேட்கவில்லை. இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா எம்.பி. சையது நசீர் ஹுசைன், நேற்று நிருபர்களுக்கு இது தொடர்பாக பேட்டியளித்தார்.

பரிந்துரை செய்தது பாஜக அமைச்சர்
சையது நசீர் ஹுசைன் கூறியதாவது: வார் ரூமில் 205 பேர் பணியாற்றுகிறார்கள். ஆனால் தேஜஸ்வி சூர்யா, 17 முஸ்லீம் ஊழியர்கள் பெயரை மட்டும் குறிப்பிட்டு குற்றம்சாட்டினார். 205 பேருமே, கிறிஸ்டல் இன்போசிஸ்டம் மற்றும் சர்வீசஸ் என்ற நிறுவனத்தால் அவுட்சோர்சிங் மூலம் மாநகராட்சிக்கு பணியமர்த்தப்பட்டவர்கள். இந்த நிறுவனத்தை பரிந்துரை செய்தது, பாஜக அமைச்சர்தான். இப்படியிருக்கும்போது முஸ்லீம் ஊழியர்களை அவமரியாதை செய்துள்ள சூர்யாவுக்கு கொஞ்சமாவது, வெட்கம் வேண்டாமா?

சர்ச்சை கருத்துக்கள்
தேஜஸ்வி சூர்யா இப்படி மத துவேசத்தை விதைப்பது புதிது இல்லை. ஒரு நாட்டை குறிப்பிட்டு அங்குள்ள பெண்கள், உடலுறவில் உச்சநிலை அடைய மாட்டார்கள் என்று மோசமான கருத்து கூறியவர்தான், தேஜஸ்வி சூர்யா. தப்ளிக் ஜமாத் விஷயத்தில் குற்றம்சாட்டி பேசியபோது, சர்ச்சைக்குரிய வகையில் பல ட்வீட்டுகளை வெளியிட்டவர் இவர்தான்.

17 பெயர்கள்
தேஜஸ்வி சூர்யா எப்படி 17 பெயர்களை குறிப்பிட்டார். இவர் விசாரணை அதிகாரியா.. எஞ்சிய 188 பணியாளர்களும் நல்லவர்கள் என்று சான்றிதழ் கொடுக்க, தேஜஸ்வி சூர்யா யார்.. கொரோனாவுக்கு மட்டுமல்ல, தேஜஸ்வி சூர்யாவின் மதவெறிக்கும் தடுப்பூசி தேவைப்படுகிறது. இவ்வாறு, காங்கிரஸ் எம்.பி. சையது நசீர் ஹுசைன் தெரிவித்தார்.

ஒரு ஜாதிக்கு பாஜக முன்னுரிமை
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரிஜேஷ் கல்லப்பா அளித்த பேட்டியில், பெங்களூரில் கொரோனா பெட் ஒதுக்கீட்டில் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டிய பாஜக தலைவர்கள் எல்லோருமே ஒரே குறிப்பிட்ட ஜாதியைச் (பிராமணர்கள்) சேர்ந்தவர்கள். தேஜஸ்வி சூர்யா கூட ஒரு டிரஸ்ட்டை நடத்தி, அவர்கள் இஷ்டத்திற்கு பெட் ஒதுக்கீட்டை பெற்று வருகிறது. ஒரே ஒரு ஜாதிக்குதான் படுக்கை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமா? மற்றவர்கள் நிலைமை எப்படியும் போகட்டும் என்பதுதான் இவர்கள் திட்டமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications