காரை வாங்கியது 11 லட்சத்திற்கு.. ரிப்பேர் செய்ய 22 லட்சம்.. பெங்களூர் 'போலோ' ஓனருக்கு வந்த சோதனை
பெங்களூர்: பெங்களூரில் அண்மையில் பெய்த கனமழையால் பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இவ்வாறு சேதமடைந்த 11 லட்சம் மதிப்பு கொண்ட ஒரு காரின் ரிப்பேரை சரிபார்க்க 22 லட்சம் செலவாகும் என பில் போடப்பட்டதால் கார் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
பழுது பார்க்க செல்லும் கார்களை உரியமுறையில் பழுது பார்க்கவில்லை என்றும்... கூடுதல் கட்டணம் வசூலித்து விட்டதாகவும் வாடிக்கையாளர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் குறைபட்டு கொள்வதை நாம் அடிக்கடி பார்த்து இருக்கிறோம்.
அதுபோன்ற ஒரு சம்பவம் தான் பெங்களூருவிலும் நடைபெற்றுள்ளது. இங்கும் கூடுதல் கட்டணம்தான் விதித்து இருக்கிறார்கள்..
பெங்களூரு பெருவெள்ளம்.. காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்.. அடித்து பேசும் முதல்வர் பசவராஜ் பொம்மை!
தலைசுற்றிப்போன கார் உரிமையாளர்
கூடுதல் கட்டணம் என்றவுடன் விலை சற்று கூடுதல் என்று நினைத்துவிட வேண்டாம்.. அவர்கள் போட்ட கட்டணம் தான் இங்க ஹைலட்ஸே.. அதாவது 11 லட்சம் மதிப்புடைய காருக்கு 22 லட்சம் செலவு ஆகும் என மதிப்பீடு போட்டு பில் கொடுத்ததை பார்த்து தலை சுற்றியிருக்கிறார் காரின் உரிமையாளரான அனிருத் கணேஷ் என்பவர். தனக்கு நேர்ந்த இந்த அனுபவத்தை அனிருத் கணேஷ் தனது லிங்ட் இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீண்ட நெடிய ஒரு பதிவிட்டு தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கும் அனிருத் கணேஷ் அதில் கூறியிருப்பதாவது:-
மழையில் மூழ்கிய கார்
பெங்களூருவில் அண்மையில் பெய்த கனமழையில் நகரின் முக்கிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இப்படித்தான் நான் வைத்திருந்த வோல்ஸ்வோகன் போலோ TSI என்ற காரும் முழுவதுமாக நீரில் மூழ்கிவிட்டது. வெள்ளம் வடிந்த பிறகு காரை பழுது பார்ப்பதற்காக ஒயிட் ஃபீல்டு பகுதியில் உள்ள வொல்க்ஸ்வோகன் காரின் டீலர் அலுவலகத்திற்கு சென்றேன். அங்கு சுமார் 20 நாட்கள் வரை காரை வைத்திருந்த ஊழியர்கள், அதன் பிறகு எனக்கு பழுது பார்க்கும் தொகை எவ்வளவு ஆகும் என்பதற்கான எஸ்டிமேட் பில்லை கொடுத்தனர்.
22 லட்சமா?..
அதை பார்த்த பிறகு நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனென்றால் 11 லட்சம் மதிப்புடைய காரை பழுது பார்க்க 22 லட்சம் செலவு ஆகும் என கூறப்பட்டு இருந்தது. இன்சூரன்ஸ் கம்பெனியை தொடர்பு கொண்ட போது, காரை மொத்த இழப்பாக எடுத்துக்கொண்டு நாங்களே சர்வீஸ் செண்டரில் இருந்து எடுத்துக்கொள்கிறோம் என பதில் வந்தது. இதையடுத்து, காருக்கான ஆவணங்களை பெறுவதற்காக ஷோ ரூமிற்கு நான் சென்றேன். அப்போது சர்வீஸ் செண்டர் ஊழியர்கள் 44 ஆயிரத்து 840 என்ற பில் தொகையுடன் ஒரு சீட்டை காண்பித்தனர்.
ரெஸ்பான்ஸ் இல்லை
நான் இது குறித்து வோல்க்ஸ்வோகன் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது 48 மணி நேரத்தில் பதிலளிப்பதாக கூறப்பட்டது. ஆனால், சொன்னபடி ரெஸ்பான்ஸ் இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பாக வோல்க்ஸ்வோகன் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது வெறும் மதிப்பீடு செய்வதற்கான தொகை 5 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் 44,840 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெரிவித்தனர். ஆனால், 22 லட்சம் செலவு ஆகும் என்று எழுத்துப் பூர்வமாக சர்வீஸ் செண்டர் தரவில்லை.
உரிய விசாரணை
மேலும், தனக்கு நேர்ந்த இந்த அனுபவம் பிறருக்கும் பயன்படும் என்ற நோக்கத்தில் தான் இதை பகிர்ந்து இருப்பதாகவும் தனது காரை ஷோ ரூமில் இருந்து எடுத்துவிட்டதாகவும் நேற்று முன் தினம் பதிவிட்டுஇருக்கிறார். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் வோல்க்ஸ்வோகன் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.