கலைந்தது எடியூரப்பா அமைச்சரவை.. கர்நாடக புதிய முதல்வர் யார்? கூடுகிறது பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்
பெங்களூர்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அடுத்த முதல்வர் எப்போது தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கலைந்து முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் காலம் நிறைவடைகிறது.
Recommended Video
இன்னும் இரண்டு வருடங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிதாக ஒருவரை முதல்வராக்க பாஜக தலைமை முயற்சிகளை எடுத்தது. ஆனால் எடியூரப்பா சார்ந்த லிங்காயத்து சமுதாய மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

லிங்காயத்துகள் வாக்கு வங்கி
கர்நாடகாவில் சுமார் 17 சதவீதம் லிங்காயத்து மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் எடியூரப்பாவுக்காக மட்டுமே, பாஜகவுக்கு தொடர்ந்து வாக்களித்து வருகிறார்கள். எனவே அவர்களை எதிர்த்துக் கொண்டு பாஜக மேலிடம் எதுவும் செய்துவிட முடியாது. மேலிடம் சொல்வதை கேட்டு நடப்பதாக எடியூரப்பா சொன்னாலும்கூட, லிங்காயத்துகள் பாஜக தலைமைக்கு எதிராக பேட்டிகள் கொடுப்பதற்கு திரைமறைவில் எடியூரப்பா தூண்டுதல் இருப்பதாக சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

எடியூரப்பா பற்றி இதே பேச்சு
முதல்வராக எடியூரப்பா பதவியேற்ற பிறகு, சுமார் 10 முறையாவது அவர் பதவி விலகப் போகிறார் என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் இப்போது அவர் தனது பதவியை நிஜமாகவே ராஜினாமா செய்து விட்டார். இன்று இரண்டாவது வருட கொண்டாட்டங்களில் எடியூரப்பா அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்க கூடிய நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் அவர்.
ராஜினாமாவா, அப்படின்னா
நேற்று அவரிடம், நீங்கள் நாளை, ராஜினாமா செய்யப் போகிறீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, கட்சி மேலிடத்திடம் இருந்து இதுவரை எனக்கு அந்த மாதிரி தகவல் வரவில்லை. கட்சி மேலிடம் எனக்கு தகவல் தெரிவித்தால் அதன் பிறகு நான் முடிவை அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார். இன்னொரு பக்கம் இரண்டு ஆண்டுகாலம் தனது ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை விளக்கி இன்று மதியம் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதனால் அவர் ராஜினாமா செய்வாரா இல்லையா என்று ஹேசியங்கள் கொடிகட்டி பறந்தன

காபந்து முதல்வர்
இந்த நிலையில் இன்றயை செய்தியாளர் சந்திப்பின்போது, தனது ராஜினாமா முடிவை எடியூரப்பா அறிவித்தார். பிறகு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கினார். இதையேற்றுக் கொண்டார் ஆளுநர். எனவே எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை கலைந்தது. இருப்பினும் அவர் காபந்து முதல்வராக தொடருகிறார். ஒரு அமைச்சரவையின் தலைவர் முதலமைச்சர்தான். எனவே அவர் பதவி விலகினால், ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகியதாக அர்த்தம். எனவே புதிதாக முதல்வர் பொறுப்பை ஏற்கும்போது, அமைச்சர்களும் புதிதாக பதவி பிரமாணம் செய்து கொள்ள வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய முதல்வர்
இதையடுத்து புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூரில் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை மேற்பார்வையிட மேற்பார்வையாளர் இன்று மாலை தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக தேசிய செயலாளர் சந்தோஷ், அமைச்சர் முருகேஷ் நிரானி உள்ளிட்டோர் பெயர்கள் புதிய முதல்வர் ரேஸுக்கான, உத்தேச பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் அந்த விவரம் இன்னும் முழுமையாக வெளியே வரவில்லை.

டி.கே.சிவகுமார் பேட்டி
எடியூரப்பா ராஜினாமா விவகாரத்தில், கர்நாடக எதிர்க்கட்சிகளில் காங்கிரஸ் மற்றும் மஜத நிலைப்பாடு வேறாக உள்ளது. பாஜக அரசே கலைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது. அந்த கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் கூறுகையில், எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு அனைத்து விஷயங்களிலும் தோல்வியடைந்து விட்டது. எனவே சட்டசபையைக் கலைத்துவிட்டு புதிதாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார். ஆனால் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மேலவை உறுப்பினர் பாரூக் அளித்துள்ள பேட்டியில் பாஜக கர்நாடகாவில் இவ்வளவு தூரம் வளர்வதற்கு எடியூரப்பாதான் காரணம். அவரை நீக்குவதற்கு பாஜக மேலிடத்துக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. ஆர்எஸ்எஸ் பேச்சை கேட்பதில்லை என்பதால்தான் அவர் நீக்கப்படுகிறார். லிங்காயத்து சமுதாய மக்கள் எடியூரப்பாவுக்கு இழைக்கப்படும் இந்த அவமரியாதையை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை என கூறியுள்ளார். எடியூரப்பாவுக்கு ஆதரவளிப்பது போல பேசி அவருக்கு ஆதரவு அளிக்கக்கூடிய வாக்கு வங்கியை உசுப்பி விடும் வேலையை மதசார்பற்ற ஜனதா தளம் செய்ததாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications