"ரொம்பவே ஸ்லோ!" நாட்டிலேயே சென்னை- மைசூர் வந்தே பாரத் தான் மெதுவானது! களமிறங்கிய இந்தியன் ரயில்வே
பெங்களூர்: இந்தியாவிலேயே மிகவும் மெதுவான வந்தே பாரத் ரயிலாகச் சென்னை- மைசூர் வந்தே பாரத் ரயில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உலகிலேயே மிக பெரிய ரயில் நெட்வோர்களில் ஒன்றாக இந்திய ரயில்வே இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா ரயில்வே பல நவீன மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து வருகிறது.
அதிலும் குறிப்பாக வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேவுக்கு புதிய பூஸ்ட் அளித்து உள்ளது. இந்த ரயில்கள் பொதுமக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
வெளியானது சென்னை-பெங்களூர்-மைசூர் வந்தே பாரத் ரயில் கால அட்டவணை.. சதாப்தியுடன் ஏன் போட்டி போடுகிறது?
வந்தே பாரத்
சென்னை- மைசூர் இடையே இயக்கப்படும் நாட்டின் 5ஆவது மற்றும் தென் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலைக் கடந்த நவ. 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மற்ற வந்தே பாரத் ரயில்களை விட இது நவீனமானது. அதிகபட்சமாக 180 கிமீ வேகத்தில் இந்த ரயிலால் செல்ல முடியும். இருப்பினும், சென்னை- மைசூர் இடையே இருக்கும் தண்டவாளத்தின் நிலைமை காரணமாக இதன் வேகம் 130 கிமீ-ஆக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
ஐந்து ரயில்கள்
நாட்டில் இயங்கும் ஐந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்களில் சராசரி வேகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் சென்னை-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தான் மிகவும் மெதுவானது. இதன் சராசரி வேகம் வெறும் 75-77 கி.மீ. ஆகவே உள்ளது. இது பயண நேரத்தை வெகுவாக அதிகரிக்கிறது. வந்தே பாரத் ரயிலின் இந்த குறைந்த வேகத்தை இணையத்திலும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
ரொம்பவே ஸ்லோ
ஒரு ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் புது தில்லி-வாரணாசி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அதிகபட்ச சராசரி வேகம் மணிக்கு 95 கிமீ ஆகும்.. மும்பை -காந்திநகர் சராசரி வேகம் மணிக்கு 84 கிமீ ஆகவும், டெல்லி-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வேகம் 82 கிமீ ஆகவும் உள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டெல்லி-ஆம்ப் ஆண்டௌரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சராசரி வேகம் கூட 79 கிமீ ஆக உள்ளது.
தெற்கு ரயல்வே
இதற்கிடையே அடுத்த ஆறு மாதங்களில் சென்னை-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை அதிகரிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. சென்னை-பெங்களூர் வழித்தடத்தில் தற்போது அனுமதிக்கப்படும் அதிகபட்ச வேகம் மணிக்கு 110 கி.மீ. ஆகும். சென்னை - அரக்கோணம் பகுதியில் மணிக்கு ரயிலை 130 கி.மீ வேகத்தில் இயக்கும் வகையில் தண்டவாளம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு அனுமதி பெறும் நடவடிக்கையில் தெற்கு ரயில்வே இறங்கி உள்ளது.
களமிறங்கிய இந்தியன் ரயில்வே
அடுத்தகட்டமாக அரக்கோணம்- ஜோலார்பேட்டை- பெங்களூரு வழியில் அதிகபட்ச வேகத்தை அதிகரிக்கும் வகையில் தண்டவாளம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நிறைவடையும். திட்டமிட்டபடி பணிகள் நிறைவடைந்தால், வந்தே பாரத் வேகம் ரயிலின் வேகம் அதிகரிக்கப்படும். இது மட்டுமின்றி இந்த பாதையில் பயணிக்கும் அனைத்து பயணிகள் ரயிலின் வேகத்தையும் அதிகரிக்க முடியும்.
சகாப்தி ரயில்
இந்த சென்னை - பெங்களூர் - மைசூர் வந்தே பாரத் ரயில் பிஸ்னஸ்மேன்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 336 கிமீ தூரமுள்ள சென்னை - பெங்களூரு இடையே 4.30 மணி நேரத்திலும் சென்னை - மைசூரு இடையே 6.40 மணி நேரத்திலும் வந்தே பாரத் ரயில் செல்லும். அதேநேரம் சகாப்தி ரயிலில் சென்னை - பெங்களூர் இடையே செல்ல 4.45 மணி நேரமும், சென்னை - மைசூரு இடையே செல்ல 7 மணி நேரமும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.