“இந்துக்களே கத்தியை கூர் செய்யுங்கள்".. சர்ச்சையை கிளப்பிய பாஜக பிரக்யா.. விளாசிய மாணிக்கம் தாகூர்
பெங்களூர்: கர்நாடகாவில் மாநாடு ஒன்றில் பாஜக எம்பி பிரக்யா தாகூர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பீர்களா? என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கேள்வியெழுப்பி இருக்கிறார்.
சில நாட்கள் முன்னதாக ஸ்ரீரங்கபட்டினத்தில் 'இந்து ஜாக்ரன் வேதிகே' அமைப்பினர் சார்பில் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணியில் ஏராளமான வலதுசாரி அமைப்பினர் பங்கேற்றிருந்தனர். இங்கு சுமார் 240 ஆண்டுகள் பழமையான ஜாமியா மஸ்ஜித் அமைந்துள்ளது. இந்த இடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பேரணியில் இவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
இந்த மசூதி கி.பி 1782ம் ஆண்டு திப்பு சுல்தான் காலக்கட்டத்தில் கட்டப்பட்டது. ஆனால் மசூதி அமைந்திருந்த இடத்தில் ஏற்கெனவே ஒரு அனுமான் கோயில் இருந்ததாகவும், திப்பு ஆட்சியில் அக்கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாகவும் இவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே இதனைத் தொடர்ந்து இந்து பாரம்பரியங்களை மீட்டெடுப்போம் என்றும், இந்துக்களின் நிலங்களை மீட்டெடுப்போம் எனவும் கூறி தட்சின கன்னட பகுதியில் இந்த அமைப்பின் சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது.
ஆயுதங்களை ரெடியா வெச்சுக்குங்க.. அட்லீஸ்ட் கத்தி.. கர்நாடகாவில் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர்!
சன்னியாசிகளின் விருப்பம்
இம்மாநாட்டிற்கு சிறப்பு அழப்பாளராக பாஜக எம்பி பிரக்யா தாகூர் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, "அவர்கள் நம்மை வீழ்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதிதான் லவ் ஜிகாத். உண்மையை சொல்வதெனில் லவ் ஜிகாத் நம்முடைய பாரம்பரியம். ஆம் இந்துக்களாகிய நாம் நமது கடவுக்களை நேசிக்கிறோம். கடவுள் படைத்த இந்த உலகில் பாவிகள் அனைவரும் அழிக்கப்பட வேண்டும் என்று சன்னியாசிகள் கூறியுள்ளனர். இவ்வாறு செய்யாவிட்டால் அன்பின் உண்மையான விளக்கம் இந்த பூமியில் நிலைத்து இருக்காது. அதேபோல லவ் ஜிகாத் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களிடமிருந்து உங்களது பெண்களை காப்பாற்றுங்கள்" என்று கூறினார்.
கூர்மையான கத்தி
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "ஷிவமொகாவில் வலதுசாரி ஆதரவாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். எனவே இந்துக்களுக்கு ஆபத்து எங்கிருந்து எப்படி வரும் என்பது தெரியாது. இதிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள வீட்டில் கூர்மையான கத்தி ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். சமையலுக்கு பயன்படுத்தப்படும் சாதாரண கத்தி இருந்தால் கூட போதும். அதனை கூர் செய்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனெினல் இங்கு ஒவ்வொருவருக்கும் தங்களை பாதுகாத்துக்கொள் முழு உரிமை இருகிறது" என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறன.
கண்டம்
இவரது பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டம் தெரிவித்து வருகின்றன. கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் மேலெழுந்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், "அன்புள்ள பிரதமரே பயங்கரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த எம்பி மீது கடும் நடவடிக்கை எடுக்க கட்சித் தலைவர் ஜேபி நட்டாவிடம் அறிவுறுத்துவீர்களா? அல்லது அமைதியாக இருந்துவிடுவீர்களா?" என்று டிவிட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.
தேர்தல்
அடுத்த சில மாதங்களில் கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து முயன்று வருகிறது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் வலதுசாரி அமைப்புகளின் பிரச்சாரம் மற்றும் செயல்பாடுகள் தீவிரமாகியுள்ளன. இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவே தற்போது 'இந்து ஜாக்ரன் வேதிகே' மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது. பாரத் ஜடோ யாத்திரையின் போது ராகுல் காந்திக்கு கர்நாடகாவில் அமோக வரவேற்பு இருந்தது. இந்நிலையில் எதிர் வரும் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை காங்கிரஸ் வகுத்திருக்கிறது. இதனை முறியடிக்கவே தீவிர வலதுசாரி செயல்பாடுகளை பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். பாஜகவினரின் செயல்பாடுகள் எதிர்வரும் தேர்தலில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.