பிரெக்ஸிட் வாக்கெடுப்பு... 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்த பிரிட்டிஷ் பவுண்ட் மதிப்பு!
லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிய வேண்டுமா? என்ற பொது வாக்கெடுப்பு காரணமாக இன்று பிரிட்டனின் அதிகாரப்பூர்வ நாணயமான பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பு தட தட வென சரிந்தது.
கடந்த 1985-க்குப் பிறகு, அதாவது 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது பவுண்ட் ஸ்டெர்லிங்.
இப்போதைய நிலவரப்படி 10 சதவீதம் வீழ்ச்சியடைந்து 1.33 டாலராக உள்ளது பவுண்ட் மதிப்பு.
உலகின் மதிப்பு மிக்க நாணயங்களில் ஒன்று பவுண்ட் ஸ்டெர்லிங். யூரோ மற்றும் டாலரின் மதிப்பை விட உயர்ந்தது பவுண்ட்.
பிரெக்ஸிட் முடிவுகள் வரும் வரை 1.50 டாலராக இருந்தது பவுண்டின் மதிப்பு. முடிவுகள் வெளிவர ஆரம்பித்த உடனே தடதட வென சரிய ஆரம்பித்தது பவுண்ட். வட கிழக்கு இங்கிலாந்து மக்கள், வெளியேற வேண்டும் என வாக்களித்தது தெரிய வந்ததுமே 1.43 டாலராக இறங்கியது பவுண்ட்.
அடுத்ததாக லண்டன் பங்குச் சந்தையில் 7 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டது. தொடர்ந்து பவுண்ட் மதிப்பு சரிந்து, 1.33 டாலராக வீழ்ந்தது.
ஐரோப்பிய யூனியனின் பொது நாணயமான யூரோவுக்கு நிகரான பவுண்ட் மதிப்பும் 7 சதவீதம் வீழ்ந்து 1.20 யூரோவானது.
2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியின் போது கூட இந்த அளவு பவுண்ட் மதிப்பு சரிந்ததில்லை என நாணய மாற்று வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.