கேசரியில கூட முந்திரி போடலையோ? தீபாவளிக்கு 20% விற்பனை சரிவு ஏன்?
தீபாவளி பண்டிகையின்போது தங்கத்தை போல முந்திரியின் விற்பனையும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த தீபாவளிக்கு முந்திரி விற்பனை சுமார் 20 சதவீதம் வரை சரிந்துள்ளது.
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு முந்திரி பருப்பு விற்பனை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
இந்த ஆண்டு 20 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னர் வீடுகளில் அதிரசம், முறுக்கு, முந்திரி கேக், குலோப் ஜாமூன், மைசூர் பாக், உள்ளிட்ட பலகாரங்கள் செய்வது உண்டு.
முந்திரி பருப்பு இடம்பெறாத பலகாரமே இல்லை எனலாம். பால் பாயாசம், கேசரி மற்றும் முந்திரி பருப்பை அரைத்து செய்யப்படும் பலகாரங்களான ரவா உருண்டை,பாசிப்பருப்பு உருண்டை என பல பலகாரங்களுக்கும் முந்திரி பருப்பை உபயோகிப்பார்கள்.
பண்ருட்டி முந்திரி
இந்திய அளவில், முந்திரி சாகுபடியில், தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பண்ருட்டி முதல் இடத்தில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மகசூல் செய்யப்படுகிறது. புதுக்கோட்டை, அரியலூர், காஞ்சிபுரத்தில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது.
பொங்கல் பரிசு முந்திரி
கர்நாடகாவில் மங்களூர், ஆந்திராவில் ராஜமுந்திரி, நரசிங்கப்பட்டணம், ஒரிசா, ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் மற்றும் கேரளாவிலும் முந்திரி சாகுபடி நடக்கிறது. ஜனவரி முதல் வாரத்தில், பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு, சுமார் 400 டன் அளவுக்கு முந்திரி கொள்முதல் செய்தன.
முழு முந்திரி விலை
தற்போது, சுபமுகூர்த்த நாட்கள், தீபாவளி பண்டிகை காரணமாக முந்திரி பயன்பாடு அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பு, தட்டுப்பாடு போன்ற காரணங்களால், அதன் விலை கிலோவுக்கு 120 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பு, தட்டுப்பாட்டால், முந்திரி விலை, தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது.
இறக்குமதி வரி குறையுமா?
இந்தியாவின் முந்திரி தேவையில் பாதி ஐவரி தீவுகள், கானா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே இந்த நாடுகளில் இருந்த இறக்குமதி செய்யப்படும் முந்திரிக்கு இறக்குமதி வரியில் 5 சதவிகிதத்தை குறைக்கவேண்டும் என்று முந்திரி இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
தீபாவளிக்கு முந்திரி விலை
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் முழுமையான மற்றும் உடைந்த முந்திரி 300-400 ரூபாய் வரையிலான விலையில் உள்ளது. இதற்கு இறக்குமதி வரியான (Import Duty) 45 சதவீதம் விதித்தால் கூட விற்பனையாளர்களுக்கு லாபமே. இந்த தீபாவளிக்கு ஒரு கிலோ முந்திரி 800-820 ரூபாய் வரையில் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முந்திரி இறக்குமதி அதிகரிப்பு
உடைக்கப்பட்ட முந்திரிக்கு சந்தையில் அதிகளவில் அதிக தேவை நிலவும் காரணத்தாலும், இதன் விலையும் வெளிநாடுகளில் குறைவாக இருக்கும் காரணத்தாலும் இந்த வருடம் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முந்திரி பருப்பு உபயோகம்
ஜூலை மாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் முந்திரிக்கு 5 சதவிகிதம் வாட் வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது முந்திரிக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதம் விதிக்கப்படுகிறது. எனினும் மக்கள் மத்தியில் இதன் விற்பனை அளவு அதிகளவில் குறைந்துள்ளது.
அல்வாவில் கூட முந்திரி இல்லையே
இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்திரி பருப்பு விற்பனை குறைந்து போனதற்கு காரணம் கார்ப்பரேட் நிறுவனங்கள் பரிசுப்பொருட்களை குறைத்ததும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வீட்டு பலகாரங்களில் முந்திரி பருப்பு உபயோகத்தை குறைத்து விட்டர்களோ என்னவோ? அதனாலும் விற்பனை குறைந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.