வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் மீது எப்ஐஆர்.. தொழிலதிபர் நவீன் ஜிண்டால் எதிர்ப்பது ஏன்?
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த விபத்து தொடர்பாக வேதாந்தா குழுமத் தலைவர் தொழிலதிபர் அனில் அகர்வால் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து பிரபல தொழில் அதிபர் நவீன் ஜிண்டால் ட்வீட் போட்டுள்ளார். அதில் அரசுத் துறை நிறுவனங்களிலோ அல்லது ரயில்வேயிலோ விபத்து நடந்தால், அதன் தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்கிறோமா? இல்லை.. அதே விதிமுறை தனியார் துறைக்கும் பொருந்த வேண்டும் என்று நவீன் ஜிண்டால் வலியுறுத்தியுள்ளார்.
பிரபல தொழில் அதிபர் நவீன் ஜிண்டால் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் சத்தீஸ்கரில் நடந்த விபத்து மிகவும் வேதனையளிக்கிறது. 20 குடும்பங்கள் தங்களின் அனைத்தையும் இழந்து நிற்கின்றன. அவர்களுக்குத் தகுந்த இழப்பீடு, வாழ்வாதார உதவி மற்றும் இந்த விபத்து குறித்த முழுமையான விசாரணை ஆகியவை எந்தவித சமரசமும் இன்றி உடனடியாகச் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

விசாரணை தொடங்கும் முன்பே அனில் அகர்வால் பெயரை FIR-இல் சேர்த்திருப்பது மிகவும் தவறான முன்னுதாரணம் என்பது ஜிண்டாலின் வாதம் ஆகும். அதற்கு அவர் கூறிய காரணங்களை பார்ப்போம். அனில் அகர்வால் ஒரு சாதாரண மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து வந்து, தனது சொந்த உழைப்பால் உலகளாவிய நிறுவனத்தைக் கட்டியெழுப்பியவர் என்று ஜிண்டால் கூறியுள்ளார்.
அதேபோல் சத்தீஸ்கர் தொழிற்சாலையின் அன்றாட செயல்பாடுகளுக்கு, வேதாந்தா குழுமத்தின் தலைவரான அனில் அகர்வாலுக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை என்றும் ஜிண்டால் கூறினார்.
அத்துடன் பொதுத்துறை vs தனியார் துறை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு ஏன் என்று நவீன் ஜிண்டால் ஒரு மிக முக்கியமான கேள்வியை எழுப்பி உள்ளார். இதுபற்றி கூறும் போது, "அரசுத் துறை நிறுவனங்களிலோ அல்லது ரயில்வேயிலோ விபத்து நடந்தால், அதன் தலைவர்கள் (Chairman) மீது FIR பதிவு செய்கிறோமா? இல்லை. அதே விதிமுறை தனியார் துறைக்கும் பொருந்த வேண்டும்." என்று ஜிண்டால் வலியுறுத்தி உள்ளார்.
ஜிண்டால் மேலும் கூறுகையில், சத்தீஸ்கவர் விபத்து வழக்கில் விசாரணை நடத்தி, ஆதாரங்களின் அடிப்படையில் யார் மீது தவறு இருக்கிறதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, எடுத்தவுடனேயே தலைவர்களைக் குறிவைக்கக் கூடாது. அப்படிச் செய்வது 'வளர்ச்சியடைந்த இந்தியா' கனவிற்கு முட்டுக்கட்டையாக அமையும். முறையான நீதி அமைப்பு இருந்தால் மட்டுமே முதலீட்டாளர்கள் தைரியமாக இந்தியாவில் முதலீடு செய்வார்கள் என்று எச்சரித்துள்ளார்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஒரு தொழிற்சாலையில் நடக்கும் விபத்திற்கு அதன் உரிமையாளர் அல்லது குழுமத் தலைவரை உடனே குற்றவாளியாக்குவது முறையல்ல. இது தொழிலதிபர்களிடையே பயத்தை உருவாக்கும் என்பதே பிரபல தொழில் அதிபர் நவீன் ஜிண்டாலின் கருத்தாக உள்ளது.














Click it and Unblock the Notifications